புறநானூறும் பழந்தமிழர் மானஉணர்வும் - மீள் வாசிப்பு

புறநானூறும் பழந்தமிழர் மானஉணர்வும் - மீள் வாசிப்பு

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புறநானூற்றின் சிறப்பியல்புகள்:

சற்றேறக்குறைய ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்த புலவர்கள் பலரால் பல காலங்களில் பல சூழ்நிலைகளில் பாடப்பட்ட புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களின் தொகுப்பே புறநானூறு என்னும் சங்கத்தமிழ் நூலாகும். இதனைத் தொகுத்தோரும் தொகுப்பித்தோரும் இன்னார் என்று தெரியவில்லை.400 புறநானூற்றுப் பாடல்களில் 138 பாடல்கள் 43 மூவேந்தர்களைப் பற்றியதாகவும் 141 பாடல்கள் 48 குறுநில மன்னர்களைப் பற்றியதாகவும் 121 பாடல்கள் பாடப்பெற்றவர்களின் பெயர் தெரியாதவைகளாகவும் அமைந்துள்ளன. 138 மூவேந்தர் பற்றிய பாடல்களில் 27 பாடல்கள் சேர வேந்தர்களைப் பற்றியும் 37 பாடல்கள் பாண்டிய வேந்தர்களைப் பற்றியும் 74 பாடல்கள் சோழ வேந்தர்களைப் பற்றியும் பாடப்பட்டுள்ளன. 141 குறுநில மன்னர்கள் பற்றிய பாடல்களில் 23 பாடல்கள் அதியமான் நெடுமானஞ்சியைப் பற்றியும் 17 பாடல்கள் வேள் பாரியைப் பற்றியும் 14 பாடல்கள் ஆய் அண்டிரனைப் பற்றியும் பேகன், குமணனைப் பற்றி ஏழு ஏழு பாடல்களும் காரியைப் பற்றி ஆறு பாடல்களும் நாஞ்சில் வள்ளுவன் பிட்டங்கொற்றன் ஆகியோரைப் பற்றி ஐந்தைந்து பாடல்களும் எழினியைப் பற்றி நான்கு பாடல்களும் இடம்பெற்றுள்ளன. 4 குறுநில மன்னர்கள் மும்மூன்று பாடல்களிலும் 6 குறுநில மன்னர்கள் இரண்டிரண்டு பாடல்களிலும் 29 குறுநில மன்னர்கள் ஒவ்வொரு பாடலிலும் பாடப்பட்டுள்ளனர்.157 புலவர்கள் புறநானூற்றின் 386 பாடல்களைப் பாடியுள்ளனர். இவர்களில் 15 பேர் பெண்பாற் புலவர்கள் 142 பேர் ஆண்பாற் புலவர்கள். 12 பாடல்களைப் பாடியவர்கள் பெயர் தெரியவில்லை.

புறநானூறு காட்டும் சங்கால வாழ்வியல்:
புறநானூறு பெரிதும் சேர சோழ பாண்டிய மூவேந்தர்களைப் பற்றியும் குறுநில மன்னர்கள் பலரைப் பற்றியும் பேசினாலும் இந்நூல் சங்ககால அரசியல் மற்றும் சமுதாய வரலாற்று நூலாகவே அறிஞர் பெருமக்களால் போற்றப்படுகிறது. ஏனெனில் இந்நூல் வழி சங்ககால மக்களின் வாழ்க்கைமுறை, அவர்தம் வீரச்சிறப்பு, புலமைத்திறம், அரசர்களின் கொடைத்திறம் மானஉணர்வு முதலான அரிய பல செய்திகளை அறிந்துகொள்ள முடிகிறது.புறநானூறு கூறும் பழந்தமிழர் வாழ்வியல் கூறுகள் பலவற்றில் தமிழர்தம் மானஉணர்வு பற்றிய செய்தியே இக்கட்டுரையின் ஆய்வுப் பொருளாகின்றது.

மானம்:

மானம் என்ற சொல் இன்றைய வழக்கில் பேசப்படும் பொருளுக்கும் திருக்குறள் சங்க இலக்கியக் காலங்களில் வழங்கப்பட்ட பொருளுக்கும் வேறுபாடு உண்டு. இன்றைக்கு மானம் என்பது வெட்கம், நாணம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.மானக்குறைவு ஏற்படுவதை அவமானம் என்ற சொல்லாலும் மானஉணர்ச்சி உடையவனை மானஸ்தன், மானி என்றும் குறிப்பிடுகின்றார்கள். ரோஷக்காரன், கோபப்படும் இயல்புடையன் என்ற பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப் படுகின்றது. மேலும் தன்மானம் என்ற சொல்வழக்கும் மானம் என்ற பொருளில் வழங்கப்படுகிறது.திருவள்ளுவர் மானம் என்ற பண்பை நற்குடிப் பிறப்பின் பண்பாகக் கருதுகின்றார் என்று அதிகார வரிசைமுறையை வைத்துப் பரிமேலழகரும் மணக்குடவரும் குறிப்பிடுகின்றனர். மானம் என்ற பண்பாவது எஞ்ஞான்றும் தம்நிலையில் தாழாமையும் தெய்வத்தால் தாழ்வு வந்துழி உயிர் வாழாமையும் ஆம் என்பது பரிமேலழகர் தரும் விளக்கம்.

அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர் -குறள். 954

என்று குடிமை என்ற அதிகாரத்தில் சொன்ன பண்பின் விரிவாகவே மானம் என்ற அதிகாரத்தைப் படைக்கிறார் திருவள்ளுவர். மானம் அதிகாரத்தில் வரும் 1, 2, 5 ஆம் திருக்குறள்கள் மேலே குறிப்பிட்ட திருக்குறளை(954) ஒத்ததாகவே படைக்கப்பட்டுள்ளன. மானஉணர்ச்சிக்குக் கேடு வருமேயானால் உயிரை விடுவதே மேலானது என்று அதிகாரத்தில் வரும் பிற குறட்பாக்கள் தெரிவிக்கின்றன.

தலையின் இழிந்த மயிர்அனையர் மாந்தர்
நிலையின் இழிந்த கடை -குறள். 964

மருந்தோமற் றூன்ஓம்பும் வாழ்க்கை பெருந்தகைமை
பீடழிய வந்த இடத்து -குறள். 968

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின் -குறள். 969

மேலும் மானம் உடையவர் தம்மை மதியாதார் பின்சென்று வாழ்வதை விட உயிரை விடுவதே மேலானது என்றும் கூறுகின்றார்.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று -குறள். 967

மானம் என்ற அதிகாரத்தில் திருவள்ளுவர் கூறும் கருத்துக்களைத் தொகுத்துப் பார்த்தால், மானம் என்பது தமக்குப் பிறர் செய்யும் மானக்கேட்டை எண்ணி அவர்மேல் கோபப்படுவதோ அவரைத் தூற்றுவதோ மானஉணர்ச்சி என்று எங்கும் எப்பொழுதும் குறிப்பிடப் படவில்லை. தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருத்;த அதனால் உண்டாகும் உணர்ச்சியே சிறந்த மானமாகும். மானம் உடையவர் தன்னலம் குறைந்தவராக விளங்க வேண்டுமே அல்லாமல் தன்னலம் கருதிப் பிறர்மேல் சினமும் பகையும் கொள்ளல் கூடாது. ஆதலால் அந்தத் தன்னல உணர்ச்சியை மானம் என்று கூறுவது பொருந்தாது. இன்னும் ஆராய்ந்தால் மானம் என்பது தன்குடி தன்நாடு முதலியவற்றின் பெருமையையும் உலக வாழ்க்கைக்கு அடிப்படையான உயர்ந்த கொள்கைகளின் பெருமையையும் காக்கப் பயன்படுவதே அல்லாமல் தன்னல அடிப்படை கொண்ட தன்பழி, தன்புகழ், தன்ஆக்கம், தன்கேடு என்பனவற்றைப் பொருளாகக் கொள்வது அன்று.மானம் உடையவர்கள் உயிர் வாழ்க்கையின் அடிப்படை கெடுவதாக இருந்தாலும், உயிர் நீங்குவதாக இருந்தாலும், உயர்ந்த நெறியிலிருந்து பிறழ மாட்டார்கள். உயர்ந்த கொள்கைகளை இழக்கும் நிலை வந்தால் அந்தக் கொள்கைகளை வாழவைத்துத் தம் உயிரை விட்டுவிடுவார்கள். இத்தகைய உணர்ச்சிக்கே மானம் என்பது பெயர்.

புறநானூற்றுப் புலவர்களும் மான உணர்வும்:

சங்ககால மன்னர்களும் மக்களும் தம்வாழ்வு உயிர் இரண்டைக் காட்டிலும் மானமே பெரிதெனப் போற்றி வாழ்ந்தார்கள் என்பதைப் புறநானூற்றுப் பாடல்களின் வழி அறிய முடிகின்றது.புறநானூற்றுக் கட்டுரையாளர்களும் திறனாய்வாளர்களும் பழந்தமிழர் வாழ்வைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம், சங்ககாலப் புலவர்கள் பலர் தம்பாடல்களில் அவர்களது மானஉணர்வை வெளிப்படுத்தியுள்ளதாகவும் மானஉணர்வுக்கு மன்னர்களால் இழுக்கு நேர்ந்தபோது அவர்களைத் துச்சமாக எண்ணிச் சாடியுள்ளனர் என்றும் பல சான்றுகளைக் காட்டி எழுதி வருகின்றார்கள். இப்படி அவர்கள் காட்டும் சான்றுகளை மறுபரிசீலனைச் செய்து புலவர்கள் வெளிப்படுத்தியது மானஉணர்வு என்பது பொருத்தமானதுதானா? என்பதை முதலில் ஆய்வோம்.

1. பெருந்தலைச் சாத்தனார் என்ற புலவர் கடியநெடுவேட்டுவனிடம் பரிசில் பெறுவதற்காகச் சென்றபொழுது அவன் பரிசில்தரக் காலம் நீட்டித்ததைப் பொறுக்காமல் பாடிய பாடல் வரிகள் அவரின் மானஉணர்ச்சியை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடுவார்கள். பெருந்தலைச் சாத்தனாரின் பாடல் வரிகள்,
முற்றிய திருவின் மூவர் ஆயினும்
பெட்பின்றி ஈதல் யாம் வேண்டலமே.
... .... .... .... .... ........ .... .... .... தேரொடு
ஒளிறு மருப்பு ஏந்திய செம்மல்களிறு
இன்று பெயரல பரிசிலர் கடும்பே. -புறம். 205.

இப்பாடலில் வரும் மூவேந்தராயினும் பேணாது, மதியாது தரும் பொருள் எமக்குத் தேவையில்லை என்று கூறும் புலவர் பாடலின் நிறைவுப் பகுதியில் தேர், யானைகளைப் பரிசிலாகப் பெறாமல் நாங்கள் பெயரமாட்டோம் என்கிறார். இது மானஉணர்வின் வெளிப்பாடா? என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
2. ஒளவையார், அதியமான் நெடுமானஞ்சி தமக்குப் பரிசில் தர ஒருசமயம் காலம் தாழ்த்தியபோது அவர் கூறிய சொற்கள் மிகச்சிறந்த மானஉணர்வின் வெளிப்பாடு என்று குறிப்பிடுவார்கள்.ஒளவையாரின் பாடல் வரிகளைக் காண்போம்,

கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல் என்அறி யலன்கொல்
.... .... .... .... .... .... ....
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே! -புறம். 206.

இப்பாடலில் அதியமான் என்தகுதியை அறியவில்லையா? அல்லது அவன் தகுதியை அறியவில்லையா? என்று கோபப்படும் ஒளவையார், இதோ உடனே புறப்படுகின்றேன் எங்கே சென்றாலும் எனக்குச் சோறு கிடைக்கும் என்கிறார். மேற்கூறிய ஒளவையின் சொற்களை திருவள்ளுவரின் மானம் பற்றிய இலக்கணங்களோடு பொருத்திப் பாருங்கள். அதுமட்டுமல்ல காலம் நீட்டித்ததற்காகக் கோபப்படும் இதே ஒளவையார் அதியமானைப் புகழ்ந்து பாடும் மற்றொரு பாடலில்,அதியமான், பரிசில் பெறூஉம் காலம்நீட்டினும் நீட்டாது ஆயினும், களிறுதன்கோட்டிடை வைத்த கவளம் போலக்கையகத்தது அது பொய்யா காதே! -புறம். 101. என்று பாடுகிறார். இப்பாடலில் அதியமான் பரிசில் தர எவ்வளவு காலம் நீட்டித்தாலும் யானைக் கொம்பிடையே வைத்த கவளம் போல உறுதியாகக் கிடைக்கும் என்கிறார். கோபப்பட்டதை மானஉணர்ச்சி என்றால், இதை என்னவென்று சொல்வது.
3. பெருஞ்சித்திரனார் என்ற புலவர் அதியமான் நெடுமானஞ்சி தம்மைக் காணாமலே தமக்குப் பரிசில் கொடுத்தனுப்பியபோது அவர் பாடிய பாடல் மிகச்சிறந்த மானஉணர்வின் வெளிப்பாடு என்று குறிப்பிடுவார்கள்.பெருஞ்சித்திரனாரின் பாடல் வரிகளைக் காண்போம்,

.... .... .... .... .... என்னையாங்கு அறிந்தனனோ
தாங்கரும் காவலன்காணாது ஈத்த இப்பொருட்கு
யான்ஓர்வாணிகப் பரிசிலன் அல்லேன்,
பேணித்திணை அனைத்து ஆயினும் இனிது
அவர்துணை அளவு அறிந்து நல்கினர் விடினே! -புறம். 208.

இப்பாடலில் என்னைப் பார்க்காமலே மன்னன் எப்படி என்தகுதியை அறிந்தான்? எப்படி என்னைப் பார்க்காமலே பரிசு கொடுத்தனுப்பலாம்? தினையளவு கொடுத்தாலும் என்னைப் பேணித் தருவதே சரி என்றெல்லாம் கோபப்படுகின்றார் பெருஞ்சித்திரனார்.இதே புலவர் குமணனைப் புகழ்ந்து பாடும் போதும் மகிழ்ச்சியோடு நீ குன்றிமணியளவு கொடுத்தாலும் போதும் என்று கூறிவிட்டு, வேறொரு பாடலில் (புறம். 161.) நான் யானைமேல் ஏறிச் செம்மாந்து செல்ல விரும்புகிறேன் எனவே எனக்குத் தகுதி இருக்கிறதா? இல்லையா? என்று பார்க்காமல் என்தகுதியை நோக்காமல் நின்தகுதியை நோக்கி யானையைப் பரிசாகத் தரவேண்டுமென வேண்டுகிறார். அதியமானிடம் என்னைப் பார்க்காமலே என்தகுதியை எப்படி அறிந்தான் என்று மானஉணர்வுடன் கேட்கும் பெருஞ்சித்திரனார் குமண வள்ளலிடம் என்தகுதியைக் கணக்கிடாமல் எனக்கு யானையைப் பரிசாகத் தரவேண்டுமெனக் கேட்கிறார் என்றால் இதனை மானஉணர்ச்சியின் வெளிப்பாடாகக் கொள்வது எவ்வாறு பொருந்தும்?. இதுபோன்றே பெருஞ்சித்திரனார் இளவெளிமானிடம் கோபப்படுவதையும் (புறம். 207) மதுரைக்குமரனார் சோழன் பெருந்திருமாவளவனிடம் கோபப்படுவதையும் (புறம். 197) மானஉணர்வின் வெளிப்பாடாகக் கொள்ள முடியுமா? என எண்ணிப் பார்க்கவேண்டும்.மேலே குறிப்பிட்ட புலவர்களின் பேச்சுக்களை எல்லாம் மானம் என்ற உயர்ந்த பண்போடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, புலவர்களின் உணர்வு வெளிப்பாடு தன்னலம் சார்ந்ததாகவும் பிறர்மேல் சினம்கொண்டு கூறும் வசைமொழிகளாகவும் உள்ளனவே அன்றி தன்தவறு பற்றித் தன்நெஞ்சமே வருத்த அதனால் உண்டாகும் உணர்ச்சியாக இல்லை.

ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
கெட்டான் எனப்படுதல் நன்று -குறள்.-967

என்ற குறளுக்கேற்பவோ,

என்பாய் உகினும் இயல்பில்லார் பின்சென்று
தம்பாடு உரைப்பரோ தம்முடையார் -நாலடி 292

வற்றிமற்று ஆற்றப் பசிப்பினும் பண்பிலார்க்கு
அற்றம் அறிய உரையற்க -நாலடி 78

என்ற நாலடியார் கூற்றிற்கேற்பவோ வாழ்பவர்களே மானமுடையார் என்று சிறப்பித்துக் கூறும் பெருமைக்குரியவர்கள். தம்முடைய வறுமைநிலையைப் பலபடக்கூறிப் பரிசில் பெற விழைபவர்கள் இந்த வரையறைக்குப் பொருந்தமாட்டார்கள். இப்படிப் புலவர்களின் வெளிப்பாட்டை மானஉணர்வின்கண் அடக்கமுடியாது என்பதால் புலவர்களின் பெருந்தகைமைக்கு ஏதும் இழுக்கு நேர்ந்துவிடாது. சமூகத் தகுதியிலும் பொருளாதார நிலையிலும் உயர்ந்த இடத்தில் இருந்த மன்னர்களிடத்து இதன் நேர்எதிரான நிலையில் இருந்த புலவர்கள் நெஞ்சுரத்தோடு தம் எதிர்ப்பை, கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பதே சிறப்பிற்குரியதுதான்.

புறநானூற்று மன்னர்களும் மான உணர்வும்:

சேரமான் பெருஞ்சேரலாதன், சோழன் கரிகால் பெருவளத்தனோடு போரிட்டபோது கரிகால்வளவன் சேரலாதன் மார்பிலே எறிந்தவேல் அவன் உடலுக்குள் ஊடுருவி முதுகுவழியாகச் சென்றது. மார்பில் எறிந்தவேல் முதுகில் புண்ணை ஏற்படுத்தியதனால் சேரமன்னன் அதுவும் புறப்புண்ணுக்கு ஒப்பாகும் எனக்கருதி உயிர்வாழ விரும்பாமல் வடக்கிருந்து உயிர் துறந்தான். இதனை,புறப்புண் நாணி மறத்தகை மன்னன்வாள் வடக்கு இருந்தனன்

ஈங்குநாள் போற் கழியல ஞாயிற்றுப் பகலே! -புறம். 65.

என்று இத்தகு மான உணர்வுடைய வேந்தன் இல்லாமையால் ஞாயிற்றையுடைய பகல் இனி முன்போல் கழியாது என்று பாடுகிறார் கழாத்தலையார் என்ற புலவர். போரில் சேரமான் பெருஞ்சேரலாதன் தோல்வி அடைந்தாலும் புறப்புண் நாணி வடக்கிருந்ததால் வெற்றிபெற்ற கரிகால் வளவனைக் காட்டிலும் அவன் நல்லவன் என்று வெண்ணிக்குயத்தியார், வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே -புறம். 66என்று சேரமான் பெருஞ்சேரலாதனைப் புகழ்ந்தரைக்கின்றார்.சேரமான் கணைக்கால் இரும்பொறை சோழன் செங்கணானோடு போர்செய்து தோல்வி அடைந்து சோழனால் சிறையிலிடப் பெறுகிறான். தனக்கு ஏற்பட்ட நீர்வேட்கை மிகுதியால் சிறைக்காவலரை நீர் தருமாறு கேட்கிறான். அவர்கள் காலந்தாழ்த்தி நீர் தருகின்றார்கள். இம்மானக்கேட்டை நினைந்து நீரை அருந்தாமல் உயிர் துறக்கிறான் சேரமன்னன் இரும்பொறை.

குழவி யிறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆஅள்அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்;படு ஞமலியின் இடர்ப்படுத் திரீஇய
கேள்அல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகையின்றி வயிற்றுத்தீத் தணியத்
தாமிரந் துண்ணும் அளவை
ஈன்ம ரோஇவ் வுலகத் தானே. -புறம். 74.

என்பது சேரமான் கணைக்கால் இரும்பொறையின் வாக்குமூலம் ஆகும்.அரசர்கள் தோல்வியுற்றுப் பகைவர்பால் துன்பமுற்று வாழ்வதையும் போர்க்களத்தில் புறப்புண் ஏற்படுவதையும் உண்ணுநீர் ஆயினும் பகைவரிடமிருந்து இரந்து பெறுதலையும் தம் மானத்திற்குப் பெரும் இழுக்காகக் கருதினார்கள் என்பதை மேற்கூறிய இரண்டு சான்றுகளும் புலப்படுத்துகின்றன. தம்மக்களோடு போரிட நேர்ந்தது குறித்து நாணி வடக்கிருந்து உயிர்துறந்த சோழமன்னன் கோப்பெருஞ்சோழனும், ஆராயாது தீர்ப்புரைத்தமைக்காக வருந்தி உயிர்நீத்த சிலப்பதிகாரத்துப் பாண்டிய நெடுஞ்செழியனும் இத்தகு மானஉணர்ச்சிக்குப் பெருமை சேர்த்தவர்களே. மேற்கூறிய மன்னர்கள் வாழ்க்கை பற்றிய செய்திகள் அனைத்திலும் அவர்கள் தம்பழிக்கு நாணியவர்கள் என்பதையும் தமது பழிக்குரிய செயலால் தம்குடிக்கு இழுக்கு நேர்ந்ததே என்று எண்ணியே தம் மானஉணர்ச்சியால் உயிர்கொடுத்துப் பழிதுடைத்தவர்களாக அவர்கள் விளங்கக் காண்கிறோம். இவர்கள் திருவள்ளுவர் கூறிய மருந்தோ மற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை என்பதற்கேற்பவும் உயிர் நீப்பர் மானம் வரின் என்பதற்கேற்பவும் தன் தவறு பற்றித் தன் நெஞ்சமே வருத்த அதனால் உண்டான உணர்ச்சியால் மானத்தைப் பேணியவர்கள்.

புறநானூற்றில் ஒரு விலங்கின் மானஉணர்ச்சி கூட உவமை வழியாகச் சோழன் நல்லுருத்திரன் என்ற மன்னனால் சுட்டிக்காட்டப்படுகிறது,

கடுங்கட் கேழல் இடம்பட வீழ்ந்தென
அன்றவன் உண்ணா தாகி வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப வேட்டெழுந்து
இருங்களிற் றொருத்தல் நல்வலம் படுக்கும் -புறம். 190.

ஒரு புலி தான் தாக்கிய பன்றியொன்று இடப்பக்கம் வீழ்ந்ததால் மான உணர்ச்சியால் தன் செயலுக்கு நாணி அதனை உணவாகக் கொள்ளாமல் யானை ஒன்றைத் தாக்கி வலப்பக்கத்தில் வீழச்செய்து பசியாறியது என உவமையாகக் குறிப்பிடப்படுகின்றது.

தொகுப்புரை:
சங்ககால மக்கள் போற்றி ஒழுகிய மானம் என்பது உணவு முதலான வாழ்க்கைத் தேவைகளுக்காக அல்லாமல் உயர்ந்த கொள்கைகளைக் காப்பதற்காகத் தம் உயிரை இழக்கும் நிலை வந்தாலும் உவந்து ஏற்றுக்கொள்கிற பண்பாகும். தன்னலம் கருதிப் பிறர்மேல் கொள்ளும் கோபம் மானமன்று. தன்பழிக்குரிய செயலால் தம்குடிக்கு இழுக்கு நேராமல் உயிர் கொடுத்துப் பழிதுடைக்கும் ஒப்பற்ற பண்பாகும். இவ்வகையில் சங்ககாலப் புலவர்களின் கோப உரைகள் அவர்களின் நெஞ்சுரத்தைக் காட்டுமே அல்லாமல் அதனை அவர்தம் மான உணர்ச்சியின் வெளிப்பாடு என்பது பொருந்தாது. சங்ககால மன்னர்கள் சிலர் புறப்புண்ணுக்கு நாணியும், பகைவனிடம் நீர்வேட்கைக்காக மானம்கெட வாழ்தலை வெறுத்தும் உயிர்விட்ட செயலே மானம் என்றும் அதுவே சிறந்த பண்பு என்றும் துணிகின்றோம்.

வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும்

வேதநாயகரும் அவரின் சில தனிப்பாடல்களும்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

இன்றைக்குச் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட கீழ்க்கண்ட பாடலைக் கவனியுங்கள்,

கேளும் பூமான்களே – கிருபை வைத்து
ஆளும் சீமான்களே
நாளும் கதியில்லா எங்கள் மேல் வர்மமோ
தாளுறும் தூசி போல் தள்ளுதல் தர்மமோ

காலைக்கும் மாலைக்கும் மூளைக்குள் எங்களை
ஆலைக்கரும்பு போல் தேய்த்தீர் - பாக
சாலைக்கும் மன்மத லீலைக்கும் ஏவின
வேலைக்கும் எங்களை மாய்த்தீர்

மூலக்கல்வி நாங்கள் வாசித்தால் ஆபத்தோ
மூடப்பெண் கொள்வீர் உமக்குப் பெரும்பித்தோ
கலைக்கிரந்தங்கள் உங்கள் பாட்டன் சொத்தோ
உமக்கென்ன காணும் தலைமேல் தலை பத்தோ

உங்கட்கு உதவியாய் எங்களைத் தேவன்
உண்டாக்கியதை அறியீரோ - செல்வ
மங்கை உடன் கல்வி நங்கை
முதலானோர்மாதர் என்று குறியீரோ

எங்களை அல்லாமல் நீங்கள் உதித்தீரோ
ஏறி ஆகாயத் திருந்து குதித்தீரோ
அங்கப்பால் உண்ணாமல் தேகம் உதித்தீரோ
அடிமை என்றெங்கள் தலையில் விதித்தீரோ

போதக யூரோப்பு மாதர்களைக் கண்டு
பொங்கிப் பொறாமை கொண்டோமே - என்றும்
பேதம் இல்லா இந்தியாதனில் நாங்கள்
பிறந்தென்ன லாபம் கண்டோமே
நாதக்கல்விக்கு நகை எந்த மூலையே
நாங்கள் விரும்போம் நவரத்ன மாலையே
வேதநாயகன் செய் பெண்மதிமாலையே
வேண்டினோம் தாரும் விடோம் உங்கள் காலையே.
(சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் ப-ள்: 184-186)

தங்களுக்குப் படிப்பிக்கும்படி ஸ்திரிகள் புருஷர்களுக்கு வேண்டுதல் என்ற தலைப்பில் எழுதப்பட்ட இந்தப் பாடலில் பெண் கேட்கிறாள், நாள் முழுவதும் ஆலையிட்ட கரும்பு போல் எங்களைக் கசக்கிக் பிழிகின்றிர்களே! அடுப்பங்கரையிலும் படுக்கையறையிலும் ஏவிய வேலைகளுக்குமாக எங்களைச் சாகடிக்கின்றீர்களே! நாங்கள் கல்வி கற்றால் அதனால் ஏதும் ஆபத்தா? படிக்காத முடப்பெண்தான் வேண்டும் என்று கேட்கிறீர்களே உங்களுக்கென்ன பைத்தியமா? படிப்பு என்பது உங்கள் பாட்டன் வீட்டுச் சொத்தா? ஆண்களாகிய உங்களுக்கெல்லாம் தலைக்கு மேல் தலையாகப் பத்துத் தலையா இருக்கிறது? பாடலின் முதல்பத்தி இது. இன்னும் முழுப்பாடலிலும் கேள்விக் கணைகளைத் தொடுக்கும் இப்பெண்ணின் கலகக் குரலைக் கேட்டால்… இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் புரட்சிப் பெண்ணின் குரலை விட மிக அழுத்தமாகவும் அறிவு ப+ர்வமாகவும் ஒலிக்கும். யார் இந்தப் புரட்சிப்பெண்? பாரதியின் புதுமைப் பெண்ணை விட ஓங்கி ஒலிக்கும் குரலுக்குரியவள். ஆண்களெல்லாம் என்ன ஆகாயத்திலிருந்தா குதித்தீர்கள்? என்று கேட்கும் அந்தப் பெண் மாய+ரம் வேதநாயகர் படைத்த புரட்சிப்பெண். 150 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களால் கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட அந்தக் காலத்திலேயே எங்களுக்கும் கல்வி கொடு! பெண்ணை விட ஆண் என்ன உசத்தி! என்றெல்லாம் குரல்கொடுத்த வேதநாயகரின் குரல்.

மாயூரம் வேதநாயகம் பிள்ளை:
மாயூரம் வேதநாயகர். சவரிமுத்துப் பிள்ளைக்கும் ஆரோக்கிய மரி அம்மாளுக்கும் மகனாகத் திருச்சிக்கு அருகிலுள்ள குளத்தூரில் 1826 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். வேதநாயகரின் பாட்டனார் மதுரநாயகம் பிள்ளை சைவ வேளாள மரபில் பிறந்தவர் என்றாலும் கத்தோலிக்கக் கிறித்தவ சமயத்தைத் தழுவியதால் அவர் வழிவந்த வேதநாயகர் பிறப்பால் கிறித்துவராகப் பிறந்தார். ஆங்கிலம், தமிழ் இரண்டிலும் மிகுந்த புலமை பெற்ற வேதநாயகருக்கு ஆங்கிலக் கல்வியைப் பல்கலைக் கழகங்களின் வாயிலாகப் பெறும் வாய்ப்பு கிடைக்கவில்லை. (சென்னைப் பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது-1857). இவர் ஆங்கிலக் கல்வியைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெரும் புலமை பெற்றிருந்த தியாகப் பிள்ளை (திருச்சி நீதிமன்றத்தில் மொழி பெயர்ப்பாளராகப் பணியாற்றியவர்) என்பவரிடம் பயின்றார். தொடக்கத்தில் தம் 22 ஆம் வயதில் திருச்சி நீதிமன்ற ஆவணக் காப்பாளராகவும் பின்னர் 24ஆம் வயதில் திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். 1856இல் ஆங்கில அரசு நடத்திய உரிமையியல் நீதிமன்ற நீதிபதிகளுக்கான எழுத்துத் தேர்வை எழுதி வெற்றி பெற்றார் வேதநாயகர். 1857இல் அவருக்கு உரிமையியல் நீதிமன்ற நீதிபதி பதவி கிடைத்தது. தம் முப்பத்தொன்றாம் வயதில் அவர் இப்பதவியினை ஏற்றார். ஆங்கில அரசால் நீதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் தமிழர், முதல் இந்தியர் என்ற பெருமைகளுக்கு உரியவரானார் வேதநாயகர் (இந்தியாவின் முதல் சுதந்திரப் போராம் சிப்பாய்க் கலகம் நடைபெற்ற ஆண்டு). நீதிபதி பதவியில் நேர்மையோடும் தன்மானத்தோடும் பணியாற்றிய வேதநாயகருக்கு இடையில் பல இடையூறுகள் வந்தன. பதினைந்து ஆண்டுகள் மட்டுமே நீதிபதியாகப் பணியாற்றிய அவருக்கு 46 ஆம் வயதில் மேலதிகாரிக்குக் கீழ்படிந்து நடக்கவில்லை என்ற காரணத்தால் கட்டாயத்தின் பேரில் விருப்ப ஓய்வு வழங்கப்பட்டது.வேதநாயகரின் குடும்ப வாழ்க்கை மிகுந்த சோகம் கலந்தது. இல்வாழ்க்கையில் அவர் மணந்துகொண்ட பெண்கள் அடுத்தடுத்துக் காலமாயினர். எனவே அவர் ஐந்து பெண்களை மணக்க நேரிட்டது. முதல் மனைவி பாப்பம்மாள். இரண்டாம் மனைவி இலாசர் அம்மையார். மூன்றாவது மனைவி அக்காள் மகள் மாணிக்கத்தம்மையார். இவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தனர். முதல் குழந்தை ஆண்குழந்தை ஞானப்பிரகாசம், இரண்டாம் மூன்றாம் குழந்தைகள் பெண் குழந்தைகள் சவரி முத்தம்மாள், இராசாத்தி அம்மாள். நான்காவது மனைவி அண்ணுக் கண்ணம்மாள். ஐந்தாம் மனைவி அம்மாளம்மாள். வாழ்க்கையில் எத்தனை சோகங்கள் வந்தாலும் கலங்காத நெஞ்சுரம் பெற்றவர் வேதநாயகர். எனவேதான் இத்துணை துன்பங்கள் தொடர்ந்த போதும் அவரால் சாதிக்க முடிந்தது.

வேதநாயகர் படைப்புகள்:
கவிதைப் படைப்புகள்
1. நீதி நூல் நீதி இலக்கியம் 1859
2. பெண்மதி மாலை பெண்கல்வி பற்றியது 1869
3. சோபனப் பாடல்கள் நலுங்குப் பாடல்கள் 1862
4. தனிப்பாடல்கள் உதிரிப் பாடல்கள் 1908
5. திருவருள் மாலை சமயப் பாடல்கள் 1873
6. திருவருள் அந்தாதி சமயப் பாடல்கள் 1873
7. தேவமாதா அந்தாதி சமயப் பாடல்கள் 1873
8. தேவதோத்திர மாலை சமயப் பாடல்கள் 1889
9. பெரிய நாயகி அம்மைப் பதிகம் சமயப் பாடல்கள் 1873
10. சர்வ சமய சமரசக் கீர்த்தனை தமிழிசைப் பாடல்கள் 1878
11. சத்திய வேதக் கீர்த்தனை தமிழிசைப் பாடல்கள் 1889
மொழிபெயர்ப்பு
12. சித்தாந்த சங்கிரகம் தமிழில் சட்ட ஆவணங்கள் 1862
13. 1850 – 1861 நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழில் சட்ட ஆவணங்கள் 1863
உரைநடை நூல்கள்
14. பெண்கல்வி கட்டுரை 1869
15. பெண்மானம் கட்டுரை 1870
16. பிரதாப முதலியார் சரித்திரம் நாவல் 1879
17. சுகுண சுந்தரி நாவல் 1887

1858 முதல் 1887 வரை தொடர்ந்து தமிழிலக்கியங்கள் படைப்பதில் ஈடுபட்ட வேதநாயகர் தமிழின் முதல்நாவலாம் பிரதாப முதலியார் சரித்திரத்தை (1879) எழுதித் தமிழிலக்கிய உலகில் தனியிடத்தைப் பெற்றுள்ளார்.

மாயூரம் வேதநாயகரின் தனிச்சிறப்புகள்:
தென்னாற்காடு மாவட்டத்தில் இராமலிங்கர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம், ஞானசபை, தருமச்சாலை போன்ற அமைப்புகளை ஏற்படுத்திப் பரபரப்பான முறையில் இயங்கிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தஞ்சை மாவட்டத்தில் அமைதியான முறையில் தமது எழுத்துக்களின் மூலம் சமூகச் சீர்திருத்தப் பிரச்சாரம் செய்து வந்தவர் மாய+ரம் வேதநாயகம். சமூகத் தொண்டோ இலக்கியப் பணியோ அவருடைய முழு நேரப்பணி அல்ல, அவராக விரும்பி ஏற்றுக்கொண்ட பணி. அதிகார பலமுள்ள அராசாங்கப் பதவியிலேயே அவர் சொகுசாக வாழ்க்கையை நடத்திச் சென்றிருக்கலாம். மாறாகத் தம் பதவி அனுபவங்களையும் அவர் தமிழ் வளர்ச்சிக்கே பயன்படுத்தினார். நீதிமன்றத் தீர்ப்புகளைத் தமிழில் வெளியிட்டுச் சட்டத்தமிழின் தோற்றத்திற்குப் பாடுபட்டார்.கிருத்துவ மத போதகர்கள் தீவிரமான மதப்பிரச்சார, மதமாற்ற இயக்கத்தை நடத்திக் கொண்டிருந்த அன்றைய காலகட்டத்தில், முழுமையான கிருத்துவ மதப்பற்றுள்ள வேதநாயகர் சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் பாடியிருப்பதும் போலிச் சமயவாதிகளை அடையாளம் காட்டும் நையாண்டிப் பாடல்களைப் பாடியிருப்பதும் குறிப்பிடத்தக்கன. வள்ளலாரைப் போலவே சர்வ சமய சமரசம் காண வேதநாயகர் முயன்றார் என்றாலும், வள்ளலாரின் வருணாஸ்ரம எதிர்ப்பில் இவரின் கவனம் செல்லவில்லை. மாறாகப் பெண் விடுதலை, பெண்கல்வி போன்றவற்றில் அதிக நாட்டம் செலுத்தினார். இந்திய, தமிழகப் பெண்களின் பரிதாப நிலை குறித்து முதன் முதலில் பாடிய தமிழ்க் கவிஞர் வேதநாயகரே.(வேதநாயகருக்கு முன்பே புதுவைக் கவிஞர் சவரிராயலு நாயக்கர் பெண்கல்வி குறித்துப் பாடியுள்ளார் என்ற தகவலும் உண்டு, இக்கருத்து ஆய்வுக்குரியது)

மாயூரம் வேதநாயகரின் தனிப்பாடல்கள்:
வேதநாயகர் தம் வாழ்நாளின் பல்வேறு சூழல்களில் எழுதிய தனிப்பாடல்கள் அவரது மறைவுக்குப் பின்னர் தொகுக்கப்பட்டு 1908 ஆண்டு வெளிவந்ததாக அறிகிறோம். பின்னாளில் சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம் பல புலவர்களின் தனிப்பாடல்களைத் திரட்டித் தனிப்பாடல் திரட்டு என்ற பெயரில் வெளிட்டபோது இரண்டாம் தொகுப்பில் மாயூரம் வேதநாயகரின் 61 தனிப்பாடல்கள் பதிப்பிக்கப் பட்டுள்ளன.( தனிப்பாடல் திரட்டு, தொகுதி-2, ப-ள் 146 - 168) அறுபத்தொரு பாடல்களும் கீழ்க்கண்ட சூழல்களில் பின்வரும் பொருளமையப் பாடப்பட்டுள்ளன.

மொத்த பாடல்கள் : 61
உத்தியோகம் குறித்தும் ஓய்வுக்காலம் குறித்தும் பாடிய பாடல்கள்: -9,
திருவாவடுதுறைச் சுப்பிரமணிய தேசிகர் மீது பாடிய பாடல்கள்: -13, பரத்ததையர் குறித்து: -1,
ஜவுளி வியாபாரி குறித்து: -1,
துறவிகளின் நீண்ட சடையைக் கேலிசெய்து: -1,
இறைச்சியுண்ணும் அந்தணர்களைப் பழித்து: -4,
புலவர்களின் புகழ்ச்சியைக் கண்டித்து: -5,
மழை வேண்டிப் பாடிய பாடல்கள்: -7,
வெப்ப மிகுதியால் சூரியனை நிந்தித்துப் பாடிய பாடல்: -2,
காரைக்கால் தனக்கோடி முதலியாருக்கு எழுதிய கடிதம்: -1,
மீனாட்சி சுந்தரம்பிள்ளை பாடிய சீகாழிக்கோவையைச் சிறப்பித்து: -2, சி.வை.தாமோதிரம் பிள்ளையவர்கள் மீது பாடிய பாடல்கள்: -2,
மனைவி இறந்த போது பாடிய பாடல்கள்: -5,
வரிவாங்கும் அதிகாரிகள் குறித்து: -2,
நாவிதரைப் புகழ்ந்து பாடியது: -1,
முதலியார் வாங்கி வந்த காளை குறித்து: -1,
வேடிக்கைப் பாடல்: -4.

வேதநாயகரின் தனிப்பாடல்களில் அவரின் சோகம் கோபம், நையாண்டி, நகைச்சுவை, நன்றியுணர்வு போன்ற பல்வேறு உணர்வுகள் வெளிப்பட்டிருப்பதைக் காணமுடியும்.வேதநாயகர் காலத்தில் தமிழகத்தில் பல அறிஞர்களும் புலவர் பெருமக்களும் வாழ்ந்து வந்தனர். அத்தகு அறிஞர்களோடும் புலவர்களோடும் வேதநாயகருக்கு நல்ல நட்பு இருந்தது. குறிப்பாக, மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையுடனும் திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் சுப்பிரமணிய தேசிகரிடமும் வேதநாயகர் நெருங்கிய நட்புகொண்டிருந்தார். இவர்கள் மட்டுமின்றி இராமலிங்க சுவாமிகள், ஆறுமுக நாவலர், கோபால கிருஷ்ண பாரதியார், சி.வை.தாமோதிரம் பிள்ளை போன்ற பலருடனும் இவர் தொடர்பு கொண்டிருந்தார். மகாவித்வான் மீனாட்சி சுந்தம் வேதநாயகர் மீது குளத்தூர் கோவை என்றவொரு கோவை நூலைப் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

வேதநாயகரின் சமுதாயப்பணி:
வேதநாயகர் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெற்று மயிலாடுதுறையில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில் தமிழகத்தில் கொடிய பஞ்சம் ஒன்று தலைவிரித்து ஆடியது. இதனைத் தாது வருஷப்பஞ்சம் என்று குறிப்பிடுவார்கள். 1876 - 78 ஆண்டுகளில் ஏற்பட்ட இப்பஞ்சத்தின் போது மக்கள் உண்ண உணவின்றிப் பட்டினியால் செத்து மடிந்தனர். இந்தப் பஞ்ச காலத்தில் வேதநாயகர் ஆற்றிய பணிகள் மகத்தானவை. தாமே தம் சொந்தச் செலவில் கஞ்சித் தொட்டிகள் திறந்து பசித்து வந்தவர்க்கெல்லாம் உணவளித்தார். பஞ்சத்தைத் தீர்க்க உதவுமாறு செல்வர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். பஞ்சம் தீர இறைவனை வேண்டிப் பாடல்கள் பாடி பிரார்த்தனை செய்தார்.சான்றாக,
எட்டுநாள் பத்துநாள் பட்டினி யோடே
இடையில் கந்தை இருகையில் ஏடே
ஒட்டி உலர்ந்த உடல் என்புக் கூடே
ஒரு கோடி பேர்கள் வசிப்பது காடே
ஊரும் இல்லாமல் - குடிக்கத்
தண்ணீரும் இல்லாமல் - அன்னமெனும்
பேரும் இல்லாமல் - பசி தீர்க்கஆரும் இல்லாமல்
ஊரில் அநேகர் உயிர் மாண்டு போனாரே
பஞ்சம் தீர் ஐயா! – உனையன்றித்தஞ்சம் ஆர் ஐயா

என்று மழையில்லாமல் பஞ்சத்தால் வாடும் மக்களின் துயர் தீர நெஞ்சுருக இறைவனிடம் வேண்டும் வேதநாயகரின் உயிர்இரக்க உணர்வை என் என்பது?

பஞ்சம் தீர்த்த சுப்பிரமணிய தேசிகர்:
படிபடியாகப் பொன்கொட்டி நெற்கொள்ளும் இப்பஞ்சத்திலே
பிடிபிடியாக மணியும் கனகமும் பெட்புறுவோர்
மடிமடியாகக் கட்டிச் செல்லத்தந்தான் பெரும்வள்ளலென்றே
குடிகுடியாகத் தொழும் சுப்ரமண்ய குணாகரனே

படிப்படியாக தங்கத்தைக் கொட்டிக் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லைப் பெற்றுச் செல்லும் பஞ்சக் காலத்தில் வாரி வழங்கிய சுப்பிரமணிய தேசிகரை நன்றியோடு பாராட்டிப் பாடுகின்றார் வேதநாயகர். மக்கள் என்னும் யானையைப் பஞ்சம் என்னும் முதலை பிடித்து அலைக்கழிக்கின்றது. எனவே விஷ்ணு சக்கராயுதத்தை ஏவியதைப் போல சுப்பிரமணிய தேசிகர் வட்டம் என்று வழங்கப்படும் வட்டமான காசினைக் கொண்டு பஞ்சத்தின் தலையைத் துண்டித்து மக்களைக் காத்தார் என்ற பொருளமைந்த இவரின் தனிப்பாடல் இதோ, கரியொத்தன பல்லுயிர்களைப் பஞ்சக் கராம்அடிக்க அரியொத்தனன் சுப்பிரமணி ஐயன் அரிச்சக்கரம் சரியொத்தன அவன் ஈந்திடும் பொன்வெளிச் சக்கரமே. (தனி- 19)
1870 வாக்கில் தமிழகத்தில் எங்கே பார்த்தாலும் விஷபேதியின் கொடுமை பரவியிருந்தது. அரசாங்கம் அந்நோய் பரவாதபடி மருந்து மாத்திரைகளைக் கொடுத்தது. வேதநாயகரும் தம்மாலான உதவிகளைச் செய்தார். அன்றியும் பேதிக்குரிய மருந்தை வாங்கிக் கிராமந்தோறும் கொடுத்து நோயிலிருந்து மக்களைக் காக்க வேண்டுமென்று வேதநாயகர் சுப்பிரமணிய தேசிகருக்குக் கவிமடல் எழுதி வேண்டிக் கொள்கிறார். இலக்கண மெய்க்கு அரை மாத்திரை யாம் இவ்வளவும் இன்றிமலக்கண் விளைபிணியாற் பலர் மாய்ந்தனர் மண்டும் இந்நோய்விலக்க அருள்புரி… சுப்பிரமணி யானந்த நின்மலனே
ஆதீனத்தோடு தமக்கிருந்த நட்பை மக்கள் சேவைக்குப் பயன்படுத்தும் வேதநாயகரின் மக்கள் தொண்டு மகத்தானது. தமிழ்இலக்கணத்தில் மெய்எழுத்துக்குக் கூட அரை மாத்திரை இருக்கிறது, மனித மெய்க்கு அந்த அரை மாத்திரை கூட இல்லாத அவலநிலையை நயமாக எடுத்துக் கூறும் கவிதை அவரின் மனிதநேயத்துக்குச் சான்று.

மழையோ வெய்யிலோ மக்கள் துன்புறக் கூடாது:
வேதநாயகர் மழை பெய்யாமல் மக்கள் துன்புற்ற போது மழைவேண்டிப் பாடினார், கடும் வெய்யிலால் மக்கள் துன்புற்ற போது கதிரவனைக் கண்டித்துப் பாடினார். மொத்தத்தில் மக்கள் நொந்தால் மாயூரரின் மனம் நோகும், கவிதை பிறக்கும். ஒரு கோடைக்காலம். கோடையின் வெப்பத்தில் மக்கள் துடித்தனர், வேதநாயகருக்குச் சூரியன் மேல் கடுங்கோபம். கதிரவனே உன்பாகன் முடமா? உன் குதிரைகள் முடமா? உன்னுடைய ஆகாய வழி தூர்ந்துவிட்டதா? ஏன் இப்படி எரிகிறாய்? உனக்கு யார் இங்கே விருந்துவைத்து அழைத்தார்கள்? கோபமும் கிண்டலுமாக கவி படைக்கிறார், பாடல் இதோ,

பகலே பாகன்போல் பரிகள் முடமோ
அகல்வான் வழிதூர்ந் ததுவோ - அகலா
திருந்தாய் திரிந்தாய் எரிந்தாய் விரிந்தாய்
விருந்தார் புரிந்தார்கள் மேல்.

தொடர்ந்து மழை இல்லாமையால் கடும் பஞ்சம். மழை பெய்யாதா? என்று மக்கள் எல்லாம் ஏங்கிக் கிடக்கிறார்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லிச் செய்யாத கருமிகளைப் போல மழை பெய்வதுபோல் போக்குக் காட்டிப் பெய்யாமல் பொய்த்து விடுகிறது.(தனி.35) உண்ணீர் இலாமையினால் உள்நீரும் வற்றியழக் கண்ணீரும் வற்றியது (தனி. 37) என்றெல்லாம் பாடும் வேதநாயகர், மேகத்திற்குத் தக்கதொரு ஆலோசனை கூறுகின்றார். வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டுபேரிகொண்டு நீதிரண்டு பெய் (தனி. 34)
(வாரி - கடல்), நீர் நிறைந்த கடல் எதிரே இருக்கிறது அதிலுள்ள நீரை வாரி முகந்து அள்ளிக் குடித்து வானில் கருமேகமாகச் சூழ்ந்து இடிமுழக்கம் செய்து மழையே நீ பெய்வாயாக என்கிறார். வாரியுண்டு வாரிமொண்டு வாரியுண்டு வானிருண்டு சோகத்திலும் சொல்நயமிக்க கவிதைகள் பிறப்பது வேதநாயகரின் கவித்திறனுக்குச் சான்று.

மாமிசமுண்ணும் பார்ப்பனர்களைப் பழித்தார்:
வேதநாயகர் காலம், ஆங்கிலக் கல்வியும் அதன்வழி ஐரோப்பிய நாகரீகமும் தமிழ் மக்களின் வாழக்கை முறைகளில் பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கிய காலம். ஐரோப்பிய மோகத்தால் நிலை தடுமாறிய பிராமண இளைஞர்கள் பலர் மாமிசம் உண்ணுதல், மது குடித்தல் போன்ற பழக்கங்களுக்கு ஆளாகி அதுவே நாகரீகம் என மயங்கிய காலம். இந்தச் சூழலில் நீதிநூல் பாடிய வேதநாயகரால் சும்மாயிருக்க முடியுமா? நகைச்சுவையாகப் பாடுவதுபோல் தம் கடும் கண்டனத்தைப் பதிவு செய்கிறார்.

ஆரணவாயினர் மாடாடுகளை அடித்து அவித்துப்
பாராணஞ் செய்ய பழகிக் கொண்டார் மதுபானத்திலும்
பூரணராயினர் இன்னவர்க் கிந்தத் துர்புத்தித் தந்த
காரணங் கண்டயற்கோர் சிரங்கொய்தனன் கண்ணுதலே.

வேதம் ஓதுகிற வாயால் மாமிசம் உண்பதும் மது குடிப்பதுமாக வாழும் பிராமணர்களுக்கு இந்த துர்புத்தி தந்த பிரம்மனை தண்டிக்கவே சிவன் அவர் தலையில் ஒன்றைக் கொய்து விட்டானாம். இது பரவாயில்லை, இந்தப் பாடலைப் பாருங்கள்.

ஊன் தூக்கி யுண்ணும் பிராமணர்க்கஞ்சி உமாபதியும்
மான் தூக்கினான் கையில் வேலவன் தூக்கினான் வாரணத்தை
மீன்தூக்கினான் கொடியாக உருவிலி மேடமது
தான்தூக்கவே அதிலேறிக் கொண்டான் அந்த சண்முகனே.

சிவன் ஏன் மானைக் கையில் வைத்துக்கொண்டான் தெரியுமா? முருகன் கோழியை ஏன் தன் கொடியில் பத்திரப் படுத்திக்கொண்டான் தெரியுமா? மன்மதன் ஏன் மீனைத் தன் கொடியில் வைத்துக்கொண்டான் தெரியுமா? முருகன் ஏன் ஆட்டைத் தன் வாகனமாக்கிக் கொண்டான் தெரியுமா? எல்லாம் மாமிசம் உண்ணும் பிராமணர்களிடமிருந்து இவற்றைக் காப்பாற்றத்தான். பாடலில் நகைச்சுவையும் நையாண்டியும் இருந்தாலும் வேதநாயகரின் கண்டிப்பும் அறிவுரையுமே மேலோங்கி இருப்பதை உணர்ந்தால் அவரின் சமூகப்பற்று நமக்கு விளங்கும்.

நகைச்சுவை உணர்வாளர் வேதநாயகர்:
வேதநாயகரின் குடும்ப வாழ்க்கையும் அரசுப் பணியும் நெருக்கடி மிக்கதாய் இருந்தபோதும் இயல்பாகவே அவர் நகைச்சுவை உணர்வு மிக்கவர் என்பதற்கு அவரின் இரண்டு நாவல்களுமே சான்று. மிகச் சிறந்த நகைச்சுவைப் படைப்பாக அவர் பிரதாப முதலியார் சரித்திரத்தைப் படைத்திருந்தார். தனிப்பாடல்களிலும் அவரின் நகைச்சுவை உணர்வு இயல்பாக வெளிப்பட்டிருப்பதைக் காணமுடியும். தன் வீட்டிலிருந்த வண்டி மாடு ஒன்றை அவர் வருணிக்கும் பாடல் நல்ல நகைச்சுவைப் பாடலுக்குச் சான்று,

இட்டமுடன் முதலியார் வாங்கிவந்த காளை தினமிருபோர் தின்னும்
சட்டமுடன் கொள்ளுண்ணும் புல்லுண்ணுமதைப் பண்டிதனில் பூட்டகிட்டவரின் முட்டவரும் தொட்டவர் மேலேகழியும் கீழேவீழும்
எட்டாள்கள் தூக்கிடினும் தடிகொண்டு தாக்கிடினும் எழுந்திராதே.

இது போல் நாவிதரைப் புகழ்ந்து அவர்பாடிய பாடலும் படித்துப் படித்து
இன்புறத் தக்கது.

முடிப்பாகச் சில வரிகள்:
ஓய்வு பெற்று மயிலாடுதுறையில் நிலையாகத் தங்கியபோது 1873-ஆம் ஆண்டில் வேதநாயகர் மயிலாடுதுறை நகராட்சிக்கு நியமனத் தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய நகராட்சிப்பணிகளில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது, பெண்களுக்குக் கல்வி கற்பிக்கப் பள்ளிக்கூடம் ஒன்றை அவர் தொடங்கியதுதான். பெண்கல்வி குறித்துக் கவிதைகள் எழுதுவதோடு நில்லாமல் வாய்ப்பு கிடைத்தபோது அதனைச் செயல்படுத்தியும் காட்டிய பெருமை அவருக்கு உண்டு. மரபுக் கவிதை, மொழிபெயர்ப்பு, உரைநடை, இசைத்தமிழ் என்ற பல்வேறு இலக்கிய வடிவங்களிலும் படைப்புகள் படைத்துப் பெண்கல்வி, பெண்விடுதலை, சமூக முன்னேற்றம், தமிழ்ப்பணி என்று பல தளங்களிலும் அவரின் ஆக்கப்பணிகள் நடைபெற்றுள்ளன. ஆங்கிலக் கல்வியால் முதல் இந்திய நீதிபதியாகப் பணியாற்றிப் பெருமைபெற்ற வேதநாயகருக்கு அவர் காலத்திலேயே ஆங்கில மொழியின் ஆதிக்கம் கவலை அளித்திருக்கிறது. ஆங்கிலம் தலையெடுக்க, ஏன் என்று கேட்பவர் இல்லாமல் தமிழ் என்னாகுமோ? என்று வேதநாயகர் வேதனையடைந்திருக்கின்றார். அதனால்தான், வாவென்று உதவ வரும் சுப்பிரமணிய வரோதயனே தான்என்று வெண்ணரன் பாடையிந் நாட்டில் தலையெடுக்க ஏனென்று கேட்பவ ரில்லாத் தமிழை யினிதளிக்க நானென்று கங்கணங் கட்டிக் கொண்டாய் இந்த நானிலத்தே என்று வெண்ணரன் பாடை- ஆங்கிலம் தலையெடுக்க ஏன்என்று கேட்பாரில்லாத் தமிழ் என்று தமிழ் குறித்துக் கவலைப்பட்ட முதல் தமிழராகத் தன்னைப் பதிவு செய்கிறார் வேதநாயகர்.வேதநாயகரின் ஞானம்:ஒரு படைப்பாளிக்குத் தம் படைப்புகள் குறித்த ஒரு கர்வம் இயல்பாகவே அமைந்திருக்கும். அதிலும் தம் காலத்து மெத்தப் படித்தவர்கள் எல்லாம் தம்மைப் புகழ்ந்து பாடிச் சிறப்பிக்கும் பேறு பெற்ற ஒரு படைப்பாளிக்கு இத்தகைய கர்வம் வருவது இயல்பே. ஆனால் வேதநாயகர் இதிலும் வேறுபட்டு நிற்கிறார். தம் நெஞ்சுக்குக் கூறுவதுபோல், பொதுவாகக் கவிதைகள் குறித்தும் கவிஞர்கள் குறித்தும் அவர் கூறும் நீதிநூல் பாடல் ஒன்று, மிகுந்த கவனத்திற்குரியதாக இருக்கின்றது.அப்பாடல் இதோ,என்னநீ வருந்திக் கவிபாடினும் எடுத்த கற்பனை முன்னோர்சொன்னதே அலால் நூதனம் ஒன்றிலைத் தொன்மை நூல் பலவாகும்முன்னம் நூலெலாம் தந்தவன் நீஅலை முற்றுணர்ந்தனை அல்லைஉன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால் உள்ளமே செருக்கு என்னே! (நீதி நூல்-313) உன்னின் மிக்கவர் பலர் உளார் கல்வியால், உள்ளமே செருக்கு என்னே! என்ற வேதநாயகரின் நீதிநூல் பாடலடி அவர் தம் நெஞ்சுக்குக் கூறியதாகப் பாடப்பட்டிருப்பினும், உலகோர் யாவர்க்குமான அறிவுரையாகவே அதனைக் கொள்ளல் சிறப்பு.

துணை நூற்பட்டியல்:
1. வேதநாயகர், சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள், 1954
2. வேதநாயகர், நீதி நூல், 1962
3. அ.பாண்டுரங்கன், வேதநாயகம் பிள்ளை, 1994
4. மா.சேசையா, முதல் தமிழ்நாவலாசிரியர் நீதிபதி வேதநாயகர், 1989
5. அருணன், தமிழகத்தில் சமூக சீர்திருத்தம், 1999

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு ஓர் ஆய்வு அறிமுகம்

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

தமிழிலக்கிய வரலாற்றில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த பாவலர்கள் பலருண்டு. ஆனால் தாமே ஓர் இயக்கமாக வாழ்ந்த பாவலர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் மட்டுமே. மூச்சிருக்கும் வரை தமிழுக்காக உயிர்த்தவர். பேச்சிருக்கும்வரை தமிழர் உரிமைக்காக முழங்கியவர். நினைவிருக்கும் வரை தமிழர் விடுதலை பற்றியே நினைத்தவர். தமிழக வரலாறு காணாத தமிழ்ப்போராளி பாவலரேறு பெருஞ்சித்திரனார்.

ஓய்ந்திடல் இல்லை, என் உள்ளமும் உணர்வும் உயிர்ச்செறிவும்
தேய்ந்திடல் இல்லை, என் விரல்களும் தாளும்! திரிந்தலைந்து
சாய்ந்திடல் இல்லை, என்உடலும், எனவே சலிப்பிலனாய்
மாய்ந்திடல் வரையும் உழைப்பேன், உரைப்பேன், மக்களுக்கே!

என்று முழக்கம் செய்த பாவலரேறு எழுதியவாறே வாழ்ந்தார். அவர் வாழ்வின் இறுதிநாள் வரை தமது எந்தக் கொள்கையையும் விட்டுக் கொடுக்காமல் வாழ்க்கையே போராட்டமாய், போராட்டமே வாழ்க்கையாய் வாழ்ந்து மறைந்தார். பாவலரேறு தனித்தமிழ்நாடு, பெரியாரின் தன்மானக்கொள்கை, மார்க்சியப் பொருளியல்கொள்கை என்ற முப்பெருங் கொள்கைகளைத் தம் உயிர்மூச்சாகக் கொண்டு இறுதிவரை போராடினார். தமிழ்த் தேசியமே அவரின் உயிர்க்கொள்கையாய் இருந்தது. தென்மொழி: பெருஞ்சித்திரனாரின் தமிழ் இயக்கப் பணியில் பெரும்பங்காற்றியது அவரின் தென்மொழி இதழே. தமிழன்பர்களின் போர்வாளாகத் தென்மொழி விளங்கியது. தென்மொழியின் முதல் இதழ் 1-8-1959இல் வெளியானது. இதழின் குறிக்கோள்முழக்கமாகப் பின்வரும் பாடல் ஒவ்வொரு இதழிலும் இடம்பெறுவது வழக்கம்.

கெஞ்சுவதில்லை பிறர்பால்! அவர்செய் கேட்டினுக்கும்
அஞ்சுவதில்லை! மொழியையும் நாட்டையும் ஆளாமல்
துஞ்சுவதில்லை! எனவே தமிழர் தோளெழுந்தால்
எஞ்சுவதில்லை! புவியில் எவரும் எதிர் நின்றே!

தென்மொழி இதழ் தன் குறிக்கோளில் ஒருபோதும் பின்வாங்கியதும் இல்லை, சமரசம் செய்து கொண்டதுமில்லை. தென்மொழி ஓர் இதழன்று, ஓர் இயக்கம் என்று பாவலரேறு குறிப்பிட்டதற் கேற்ப இதழின் கட்டுரைகளில் பாடல்களில் தமிழுணர்வு கொழுந்துவிட்டெரியும்.

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் வெண்ணூற்பா:
பாவலரேறு, பாடல்கள் மற்றும் கட்டுரைத் தொகுதிகளாக இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். அச்சு வடிவம் பெறாத படைப்புகளும் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பாவலரேறுவின் பாடற்படைப்புகளில் தனிப்பெருஞ் சிறப்புடன் குறிப்பிடத்தக்க ஒன்றுதான் உலகியல் நூறு. உலகின் இயற்கைத் தன்மைகளை விளக்கும் நூறு பாடல்களைக் கொண்ட நூல் என்ற பொருளில் உலகியல் நூறு என்று பெயரிட்டுள்ளார். இந்நூல் 1973 - 74ஆம் ஆண்டுகளுக்கிடையில் எழுதப்பெற்றது என்று நூலாசிரியரே தம் முன்னுரையில் குறிப்பிடுவார். தனிநூலாக இதனைப் படைத்த பின்னர், 1976 முதல் 78 முடிய தென்மொழி இதழில் பகுதி பகுதியாக இந்நூலின் பாடல்கள் வெளியிடப்பட்டன. பின்னர் 1982இல் உலகியல் நூறு முழு நூலாக வெளியிடப் பெற்றது. இந்நூலுள் உள்ள பாடல்கள் நூறும் வெண்பா யாப்பில் அமைந்தனவாகும். இந்நூலின் பாடல்கள் கருத்துச் செறிவால் நூற்பா எனும் உணர்வினை ஊன்றிப் படிப்பார்க்கு ஊட்டுவதால் இந்நூலின் பாவமைப்பை வெண்ணூற்பா(வெண்-நூல்-பா) எனும் புதிய சொல்லால் வழங்கலாம் என்பார் ஆராய்ச்சி முன்னுரை எழுதிய அருளி. பாடல்களோடு அதன் சுருக்கமான பொழிப்புரையும் இணைத்து வெளியிடப்பட்டுள்ளது. பாடல்கள் திண்ணிய மெய்ப்பொருள் கருத்துக்களை வெளிப்படுத்துவன வாகையால், பாடல் அமைப்பும் இறுகலாகவே உள்ளது. அதனைப் பொழிப்பு ஓரளவே குழைவாக எடுத்துக் கூறுகிறது. இதில் உள்ள கருத்துக்களை இதைவிட மிக எளிமையாக எடுத்துக் கூறுவதானால், அஃது இந்நூலைப்போல் பலமடங்கு பெரிதாக அமைந்துவிடும். பிற்காலத்து மெய்ப்பொருளுணர்வும் தமிழ்த் தகுதியும் அறிவு ஒளியும் வாய்க்கப் பெற்றோர் எவரேனும் அதைச் செய்யட்டும்என்று இந்நூலின் பொழிப்புரை குறித்து நூலாசிரியர் கருத்துரைப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது.

நூல் நுவலும் பொருள்:
நூலுள் பேசப்படும் உள்ளடக்கம் பற்றிப் பாவலரேறு பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.உலகியல் நூறு என்னும் இந்நூல் உயர்ந்த மறைவான உலகியல் செய்திகளை, ஓரளவு முற்றும் அடக்கிக் கூறுவதாகும். அகண்டாகாரமாகப் புடைவிரிந்து, எண்ணத்திற் கெட்டாமல் பரந்து கிடக்கும் இப்புடவியுள்(பிரபஞ்சத்துள்) மாந்தப் பிறப்பிடத்தின் துகள் இருப்பும், அவனின் துணுக்கிருப்பும், அத்துணுக்கின் ஆட்டமும் அடக்கமும், ஓக்கமும் ஒடுக்கமும் எத்தகையன என்பதைத் துல்லியமாக, மெய்ப்பொருள் நூல்கள் போல் விளக்கிக் காட்டுவது இந்நூல். இந்நூலுள் வரும் உண்மைகள் எல்லாம், எல்லார்க்கும், எவ்வகையானும் எளிதே விளங்குவன அல்ல. ஆழ்ந்து தோய்ந்த சிந்தனையால் வெளிப்படுத்தப் பெற்ற மெய்க்கூறுகள் இவை. உலகியல் நூறு அடிப்படையில் ஓர் அறவியல் நூல். தமிழின் பிற அறவியல் நூல்களைப்போல் இந்நூல் அமைக்கப்படவில்லை. அறிவியல், மெய்ப்பொருளியல், அறவியல், உலகியல் கருத்துக்களைப் பிசைந்து வார்த்த தனிப்படைப்பாக இந்நூல் அமைந்துள்ளது. அறிவியல், குறிப்பாக இயற்பியல் உண்மைகளையும் மெய்ப்பொருளியல் கருத்துக்களையும் இணைத்து உலகியல் மற்றும் வாழ்வியல் கருத்துக்களை முன்னிறுத்தி படைக்கப்பட்டுள்ள இந்நூல்போல் ஓர் அறவிலக்கிய நூல் தமிழில் முன்னும் இல்லை பின்னும் இல்லை. தமிழில் இது ஒரு புதிய இலக்கியவகை. உலகின் வேறெந்த மொழியிலாவது இதுபோல் ஓர் அறநூல் எழுதப்பட்டிருக்குமா? என்றால் ஐயமே.
தமிழ் வளர்ச்சிக்கும் தமிழின மீட்புக்கும் தமிழ்நில மீட்புக்கும் தொடர்ந்து தொண்டாற்றிய பாவலரேறு உலகியலை விளக்கப் புகுந்த இந்நூலின் நூறு பாடல்களிலும் எவ்விடத்தும் தமிழ், தமிழினம், தமிழ்நாடு இவைகளைக் குறிப்பிடாமல் பொதுமை தோன்றப் படைத்துள்ளமை இந்நூலின் தனிச்சிறப்பாகும். நாடு, இனம், மொழி கடந்த நிலையில் உலக மாந்தர் அனைவருக்கும் பொதுவானதாகவே இவ்வறவிலக்கியத்தைப் படைத்துள்ளார் பாவலரேறு.

நூல் அமைப்பு:
உலகியல் நூறின் அனைத்துச் செய்யுள்களிலும் உலகின் நுண்பொருள் பருப்பொருள் இயக்கங்கள் அனைத்தும் விளக்கியுரைக்கப் பட்டுள்ளன. இதன் பெரும் பகுப்பு இயல்களாகவும் குறும் பிரிவு நிலைகளாகவும் பாகுபாடு செய்யப்பெற்றுள்ளன. நிலை என்பது இருப்பு நிலை, இயல் என்பது இயங்கு நிலை எனவே உலக இருப்பும் இயக்கமும் இதில் காட்டப்பட்டுள்ளன என்பார் நூலாசிரியர் பாவலரேறு. உலகியலின் பெரும் பரப்பினை 1.உலகியல், 2.நாட்டியல், 3.மாந்தவியல், 4.பொதுமையியல், 5.வாழ்வியல், 6.குடும்பவியல், 7.ஆண்மையியல், 8.பெண்மையியல், 9.உறவியல், 10.அயலியல், 11.வினையியல், 12.செல்வயியல், 13.ஒப்புரவியல், 14.அறிவியல், 15.புகழியல், 16.இறப்பியல், 17.பிறப்பியல், 18.உயிரியல், 19.ஓர்பியல், 20.இறைமையியல் என்ற இருபது இயல்களாகப் பாகுபடுத்தி, ஒவ்வோர் இயலையும் ஐயைந்து நிலைகளாகக் கூறுபடுத்தி மொத்தம் நூறு தலைப்புகளில் நூறு வெண்பாக்களில் நூலை அமைத்துள்ளார்.

நூலின் தொடக்கம்:
தமிழ் நூல் மரபில் உலகம் என்று நூலைத் தொடங்குதல் மரபென்றும் மங்கலமென்றும் கருதப்படும். உலகியல் நூறு நூலின் தொடக்கத்தில் உலகம் என்று முதல் இயலின் தலைப்பிட்டு நூலைத் தொடங்கும் ஆசிரியர்,

புடவிபல ஒன்றுகடல் புன்மணலிஞ் ஞாலம்
அடவியென் மீன்செறிவாம் அண்டம்பல் கோடி
இடவரைகள் எண்டிசைகள் இவ்வுலக வாக்கம்
கடவிடைகள் நேர்ச்சிக் கணிப்பு (பா.1)

என்று முதல்பாடலை அமைத்துள்ளார். இப்பாடல் புடவி என்று தொடக்கம் கொண்டுள்ளது. புடவி என்பது பிரபஞ்சம், புடவிகளை நோக்க இவ்வுலகம் கடற்கரை மணற்பரப்பில் ஒரு மணல் துகளுக்கு ஒப்பாம். உலகு என்று தொடங்குவதிலும் பேரண்டப் பெரும் பரப்பாம் புடவி எனத் தொடங்குவதின் சிறப்பினை ஓர்ந்து உணர்தல் வேண்டும். புடவிகள் பலவாகும். அவற்றுள் ஒன்றினது, கடற்கரையின் புல்லிய மணலைப் போன்றது இவ்வுலகம். அடர்ந்த காடு போலும் செறிந்த விண்மீன்களைக் கொண்ட அண்டங்கள் பல கோடியாகும். இவற்றுள் இடமும் அளவுகளும் எட்டுத்திசைகளும் இவ்வுலகத்திற்கென உருவாக்கிக் கொண்ட ஆக்கங்களாம். வினாக்களும் விடைகளும் இங்குள்ள நிகழ்ச்சிகளின் அடிப்படையில் எழுந்த கணிப்புக் கூறுகளாம். நூலின் முழுச்சிறப்பும் முதற்பாடலிலேயே தெற்றெனப் புலப்படுகின்றது. காலம் என்று தனிப்பட்டு ஒன்றும் கிடையாது. தூரத்தையும் இடைவெளிகளையும் காலத்திலிருந்து தனியாகப் பிரிக்க முடியாது. ஒளியின் வேகத்தில் நம்மால் செல்லமுடியும் எனில் காலம் அங்கே மறைந்துவிடுகிறது. ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் வெளிப்படுத்திய ரிலேடிவிட்டி - சார்பியல் கோட்பாடு இப்பாடலில் பொதிந்துள்ளது. காலம் முதலான அளவுகள், மேல் கீழ், இடம் வலம், முன் பின் என்பன போன்ற இடம் திசைகள் குறித்த விளக்கங்களும் நாம் வகுத்துக் கொண்டவையே அன்றி வேறில்லை. நிகழ்ச்சிகளும் அது குறித்த கணிப்புக் கூறுகளுமே வினா விடைகளுக்கு அடிப்படை. இப்படி, தொடக்கச் செய்யுளிலேயே நம்மை மலைக்கச் செய்துள்ளார் நூலாசிரியர். பிரபஞ்சத் தோற்றம் பெருக்கம் ஒப்பு இவைகளை முதல்பகுதியில் குறிப்பிடும் ஆசிரியர் இப்புவியின் இறுதி பற்றியும் சுட்டிக்காட்டுகின்றார்.

தாயொளியும் ஒல்கத் தணந்து நிலைமாறிப்
போயழியும் கங்குற் பொடிந்து. (பா.5)

இதன் பொழிப்பு, இத்தொன்மையான உலகம் என்றோ ஒரு காலத்தில் தனக்கு ஒளி நல்கும் தாயாகிய கதிரவனின் ஒளி குறைந்து குளிரடைதலால் தன் நிலையில் திரிபுற்று, அதனின்று விலகியோடி இருட்பகுதிக்குள் புகுந்து பொடிந்து அழிவதாகும். சூரியன் வெப்ப ஆற்றல் முழுவதையும் இழந்த நிலையில் கரும்பொந்தாய் மாறும் அதனுள் பூமி தன்னையழித்துக் கொள்ளும் என்ற அறிவியல் உண்மை இப்பாடலில் பொதிந்துள்ளது. தமிழரின் தனிப்பெருஞ் சொத்தாகவும் உலகப் பொதுமறை என்ற சிறப்பிற்குரியதாகவும் விளங்கும் திருக்குறளின் பிழிவாக இவ்வுலகியல் நூறு நூலைப் பெருஞ்சித்திரனார் வடித்துள்ளார்.
பல குறட்பாக்களில் சொல்லப்பட்ட அறங்கள் இந்நூலின் ஒரே வெண்பாவில் அமைந்து சிறக்கின்றமை ஆழ்ந்து பயிலுதற்குரியது. குடும்பவியல், உறவியல், வினையியல், செல்வயியல், அறவியல் முதலான இயல்கள் திருக்குறளோடு ஒப்பிட்டு ஆய்தற்கு இடம்தருவனவாய் அமைந்துள்ளன.

பொதுவுடைமை அறம் கூறும் நூல்:
பாவலரேறுவின் உயிர்க்கொள்கைகள் மூன்றனுள் ஒன்றாகிய மார்க்சிய பொதுவடைமைக் கொள்கையை உலகியல் நூறின் பொதுமையியல், ஒப்புரவியல் பகுதிகளில் சிறப்பாக வலியுறுத்திப் பாடுகின்றார்.
ஊனுடம்பு வாய்த்த உயிர்க்கெல்லாம் வாழ்க்கை பொது (பா.62)
மனிதர்களுக்கு மட்டுமல்ல உலகில் வாழும் எல்லா உயிரினங்களுக்கும் உலகும் உலகவாழ்க்கையும் பொது, எனவே உலக வளங்களை அனைத்துயிர்களும் வேறுபாடின்றித் துய்த்தலே கடமை என்கிறார். வேறு பாடல்களிலும், உலகுடைமை யார்க்கும் உடைமை (பா.65) என்றும்
தொகையுலகில் இன்புறுதல் எல்லவர்க்கும் (பா.64) என்றும்
வரையறை செய்கின்றார். எல்லோரும் இன்புற்றிருக்க, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு ஈதல் வேண்டும் என்ற பழைய ஈகைக் கொள்கையைப் பாவலரேறு முன்மொழியவில்லை. மாறாக, ஈகையின் வடிவமான வள்ளண்மை என்பது உயர்வில்லை என்றும் இல்லாமையைப் பேணிப் பாதுகாக்கும் பழைய முயற்சியே அது என்றும் கூறுகின்றார்.

வள்ளண்மை
என்றும் உயர்வன்றே இல்லாமை பேணுமொரு
தொன்று முயல்வே அது! (பா.63)

என்பது அப்பாடல்.

உழைப்பொருபால் ஓங்கும் உவப்பொருபால் ஒன்னார்
இழைப்பொருபால் எய்தல் இகழாம் - தழைப்பெய்தல்
வேண்டின் உடலுழைப்பு வேளாண்மை துய்ப்பு
யாண்டும் பொதுவமைத்தல் யாப்பு (பா.16)

உடலுழைப்பு ஒருபக்கமும் உவப்பு ஒருபக்கமும் என்றிருத்தல் இழுக்கு. நாடும் மக்களும் செழிப்படைய வேண்டுமானால் உடல் உழைப்பைப் பொதுவாக்கல் வேண்டும், உழவையும் உழவுக்கான நிலத்தையும் பொதுவாக்கல் வேண்டும், உலக இன்பங்களை நுகரும் துய்ப்பையும் பொதுவாக்கல் வேண்டும் என்று ஒரே பாடலில் பொதுவுடைமைக் கொள்கையின் பிழிவைக் கூறி உலகியல் நூறு அறவிலக்கியத்தை உலக அறவிலக்கியமாக இலங்கச் செய்துள்ளார் பாவலரேறு. உடைமை பொதுவாகவில்லை யென்றால் நாட்டில் சமத்துவம் இருக்காது. ஒருபக்கம் வளமை, மறுபக்கம் வறுமை என உலகமே அலங்கோலமாயிருக்கும். இந்த வேறுபாடுகளைக் களைந்து சமத்துவ சமுதாயத்தைக் கட்டமைத்தல் நமது கடமை. இந்தக் கடமையில் நாம் தவறினால்,

திருக்குவைசூழ் மாடத் தெருக்கடையின் ஓரத்து
உருக்குலையும் வாழ்க்கை ஒழிக -பெருக்கமுறும்
வான்தோய் வளமனைக்குள் வன்குடில்வாழ் ஏழையர்தம்
கான்தோயும் காலம் வரும். (பா.18)

வன்குடில் வாழ் ஏழையர் வளமனைக்கும் நுழையும் காலம் வரும் என்பதற்கு, ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி, போராட்டம், புரட்சி வெடிக்கும் என்பதாகப் பொருள் கொள்ளுதல் வேண்டும். பொதுமையியல், ஒப்புரவியல் என்ற இரண்டு இயல்களிலும் நூலாசிரியர் அமைக்கும் பத்து பாடல்களும் சுரண்டல் சமூகத்தின் இழிவையும் பொதுவுடைமைச் சமூகத்தின் மேன்மைகளையும் எடுத்துச்சொல்லி உலகின் இன்றைய தேவையை வலியுறுத்துகின்றன. மாந்தவியல் எனும் பகுதியில் ஒழுக்கம் என்பதை விளக்கப் புகுந்த நூலாசிரியர் ஒழுக்கம் பசியின்மை ஊன்றுதொழில் கல்வி (பா.14) என்கிறார். நாட்டு மக்களுக்கு உணவு, தொழில், கல்வி என்ற இம்மூன்றையும் முறையாக வழங்கினால் ஒழுக்கம் தானாக நிலைபெறும் என்கிறார். சமமற்ற பகிர்வே நாட்டில் நிலவும் குற்றங்களுக்கு அடிப்படை. சமத்துவம் ஒழுக்கத்தை நிலைநிறுத்தும் என்பது ஆசிரியர் கருத்து.அறங்களும் சட்டங்களும் அனைவர்க்கும் பொதுவா? நாட்டியல் என்னும் பகுதியில் அதிகாரத்திற்கும் சட்டத்திற்கும் உள்ள தொடர்பு குறித்த தம் பார்வையைப் பதிவு செய்கிறார் பாவலரேறு.

அமைத்த அதிகாரத் தாள்வோர்க்குச் சார்பாய்
சமைத்துக் கொளும்நெறியே சட்டம் -இமைத்துரைப்பின்
ஆனைக் குழுசெய் அறநெறியாங் கோர்ஏழைப்
பூனைக் குதவுமெனல் பொய். (பா.7)

சட்டங்கள் என்றைக்குமே அதிகாரத்தைக் கட்டமைக்கவும் விளிம்பு நிலை மக்களை ஒடுக்கவுமே உருவாக்கப்படுகின்றன என்ற உண்மையை விளக்குவதோடு ஆனைக் குழு அதாவது அதிகாரம் படைத்தவர்கள் உருவாக்கும் சட்டம் பூனைக் குழுவிற்கு அதாவது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு என்றைக்குமே உதவாது என்கிறார் ஆசிரியர். மேலும் இப்பாடலில் சட்டங்;கள் குறித்து அவர்முன் வைத்த விமர்சனங்கள் அறநெறிகளுக்கும் பொருந்தும் என்கிறார். அறநெறிகளை விளக்கப் புகுந்த ஓர் அறவியல் இலக்கியத்தில் அறம் - அதிகாரம் இவைகளுக்கு இடையிலான தொடர்பினைச் சரியான பார்வையில் எடுத்துக் காட்டுவதன் மூலம் நூலை வாசிப்பவர்களுக்கு உரிய வழிகாட்டியாகவும் திகழ்கிறார் பாவலரேறு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வெற்று முழக்கத்தைக் கேட்டுப் பழகிய நமக்குப் பாவரேறுவின் குரல் ஒரு புரட்சிக் குரலாகவே ஒலிக்கிறது.

தொண்டின் மேன்மை:
புகழியல் எனும் பகுதியில் தொண்டுநிலை பற்றி விளக்குமிடத்து, தோய்ந்தார் பொருட்டு உழைத்தல் தொண்டென்ப என்று தொண்டிற்கு இலக்கணம் வகுப்பதோடு தொண்டு செய்வதில் உள்ள இடர்ப்பாடுகளையும் பட்டியலிடுகிறார். பாடல் பின்வருமாறு,

தோய்ந்தார் பொருட்டுழைத்தல் தொண்டென்ப உள்ளச்சீர்
வாய்ந்தார் துணிவின் வயப்படுக -ஆய்ந்துரைக்கின்
துன்பம் இழவிழிவு தோளின்மை தூங்காமை
இன்பென்பார் ஆற்றல் இனிது. (பா.75)

இப்பாடலில் துன்பம், இழப்பு, இழிவு, துணையில்லாமை, சோர்தலில்லாமை இவைகளை யார் இனிது என்று கருதி உழைக்க அணியமாய் இருக்கின்றார்களோ அவர்களே தொண்டு செய்தல் முடியும் என்கிறார். பாவலரேறு அவர்களின் வாழ்க்கையை அப்படியே படம் பிடிப்பதாக உள்ளது இப்பாடல். தமிழுக்குத் தொண்டு செய்து வாழ்க்கையையே அதற்காக ஈடு கொடுத்த ஆசிரியர் மேற்கூறிய இலக்கணங்களுக்கு இலக்கியமாகத் திகழ்ந்தார் என்பது மிகையன்று.
அதே புகழியல் பகுதியில் மான நிலை என்ற பொருளில் பாடும் போது,

மனவுயர்ச்சி தாழவரல் மானம் அதுதான்
இனவுயர்ச்சி காட்டும் எழுச்சி -இனவுயர்ச்சி
உள்ளுவார்க் கில்லை உயர்மானம் ஆங்கதனைக்
கொள்ளுவார்க் கில்லை குனிவு (பா.74)

என்று பாடுகிறார். மனவுயர்ச்சிக்குத் தாழ்வு வருமானால் அச்சூழலில் தோன்றும் நல்லுணர்வே மானம் என்றும் இந்த நல்லுணர்வுதான் ஓர் இனத்தின் உயர்வைக் காட்டும் அடையாளம் என்றும் குறிப்பிடும் ஆசிரியர், இனவுயர்ச்சியைக் கருதி உழைக்கின்றவனுக்குத் தன்பொருட்டு இந்த மானவுணர்ச்சி தேவையில்லை என்றும் அதனால் தாழ்ச்சியொன்றும் இல்லை என்றும் கூறுகின்றார். இனத்தின் உயர்வுக்குப் பாடுபடும் தொண்டன், போராளி தனிப்பட்ட மானவுணர்ச்சி பற்றியெல்லாம் கவலைப்படத் தேவையில்லை. தமிழ் இனவுயர்ச்சிக்காகப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரும் தம் தனிப்பட்ட மானவுணர்ச்சி பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல் எத்தனையோ அவமானங்களையும் தாழ்வுகளையும் ஏற்றுப் போராடினார் என்பது இங்கே நினைத்துப் பார்க்கத்தக்கது.

பிறப்பியலும் உடற்கூற்று வண்ணமும்:
பிறப்பியல் என்னும் இயலில் உடல் நுகர்ச்சி நிலை, கருநிலை, உருநிலை முதலான பாடல்களில் மனித உயிர் பிறப்பின் நுணுக்கங்களை வியப்புற விவரித்துச் சொல்கின்றார்.

விழிமின்பாய்ந் துள்வெதுப்ப வேண்மதநீர் ஓடிக்
கழிபெருநற் காமம் கனப்பப் -பொழியன்பால்
சொல்லிதழ்க்கை மொய்த்தூர்ந்துள் ஒத்துச் சுரப்பாடி
வல்லுறுத்துத் துய்த்தல் வரைத்து (பா.81)

ஆண் பெண் உடல்நுகர்ச்சியை வருணிக்கும் இப்பாடல் படித்து இன்புறுதற்குரியது. அடுத்த பாடலில்

வித்துசினை ஒன்றித்தாய் வேதுநீர் உள்வாங்கிப்
பத்துமதி தாங்கிப் படர்ந்து (பா.82)

என்று கருநிலையை விவரிக்கும் பகுதி, ஒருமட மாது.. .. எனத்தொடங்கும் பட்டினத்தாரின் உடற்கூற்று வண்ணத்தை ஒத்த நயமான பகுதியாகும்.

உலகியல் நூறும் இயற்பியலும்:
பாவலரேறு தாம் படைத்த உலகியல் நூறு எனும் அறிவற இலக்கியத்தில் பிற அறநூல்கள் பேசாத பல புதிய உண்மைகளை பேசுகின்றார். நூலின் தொடக்கத்திலும் இடையிலும் நிறைவிலும் அவர்விளக்கும் அறிவியல் மற்றும் மெய்ப்பொருளியல் உண்மைகள் நூலாசிரியரே குறிப்பிடுவது போல் எல்லோர்க்கும் எளிதில் விளங்கக் கூடியதாக இல்லை. ஆழ்ந்திருக்கும் கவியுள்ளம் காணும் அறிவினோர்க்கே விளக்கமுறுதல் கூடும். குறிப்பாக இறப்பியல், உயிரியல், ஓர்பியல், இறைமையியல் முதலான இயல்களில் ஆசிரியர் விளக்கும் அறங்கள் அத்தகையனவே. ஓர்பியலில் இடம்பெறும் இயக்கநிலை பற்றிய பாடலில் ஆசிரியர் பொருள், ஆற்றல் இரண்டின் இயல்புகளையும் விளக்கி, பொருளின் உள்நின்று இயக்குகின்ற உயிர்க்கூறே இறை என்று விளக்குகின்றார்.

பொருளனைத்தும் ஒன்றாகும் ஆற்றலெலாம் ஒன்றாம்
உருளிரண்டும் ஒன்றினோ டொன்றாம் - மருள்நிலைகள்
ஆன்ற வியக்கென்ப ஆதல் பொருளாம்உள்
ஊன்றல் இறையென் றுணர் (பா.93)

உலகில் பொருள்கள் வேறு வேறாகப் பிரிந்து நின்றாலும் அடிப்படையில் பொருட்கூறுகள் அனைத்தும் ஒன்றே. பொருளை மிகச்சிறிய கூறாகப் பகுத்தால் கிடைப்பது அணு. எல்லா அணுவினுள்ளும் மூலக்கூறுகளாய் இருப்பவை எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் எனும் இவையே. எனவே பொருளனைத்தும் ஒன்றாகும் என்று ஆசிரியர் உரைப்பது சாலப் பொருத்தமே. பொருள்கள் ஒன்றானால் ஆற்றலும் ஒன்றே, ஏனெனில் பொருளைச் சிதைக்கின் ஆற்றலாகும், ஆற்றல் திரண்டால் பொருளாகும். பொருள், ஆற்றல் இவைகளை விளங்கிக் கொண்டால் இறையை உணர்தல் எளிது என்பதனால் இரண்டையும் விளக்கிவிட்டு ஆற்றலாகவும் பொருளாகவும் இருக்கும் அதனை உள்நின்று இயக்கும் உயிர்க்கூறே இறை என எளிமையாய் விளக்கம் தருகின்றார். நவீன இயற்பியலில் அணுக்களை அதைவிட நுட்பமான ஆல்பா துகள்களால் துளைத்துப் பார்த்தபோது அணுவின் உள்ளே பெரும்பாலும் வெட்டவெளியாக இருப்பதையும் மையத்தில் கருபோல் சில புரோட்டான் துகள்களும் அவற்றைச் சுற்றிச் சில எலக்ட்ரான் துகள்களும் இருப்பதைப் பார்த்தார்கள். ஓர் அணுவுக்கும் மற்றோர் அணுவுக்கும் உள்ள வேறுபாடு அதன் கருவில் இருக்கும் துகள்களின் எண்ணிக்கையில்தான். உள்ளே இருக்கும் துகள்கள் எப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. இந்த இயக்கத்தின் வடிவம்தான் நாம் காணும் பொருள்கள். ஊன்றிப் பார்த்தால் இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே இயக்கம்தான். இதுதான் அறிவியலின் முடிபு. இந்த இயக்கம்தான் இறை என்பது பாவலரேறுவின் விளக்கம்.

.. .. .. .. .. .. .. .. .. வற்றாத
ஊற்றாய் உலகமாய் ஒண்கதிராய் நீள்விசும்பாய்
ஆற்றல் நிகழ்த்தும் அலைவு (பா.78)

ஆற்றலின் அலைவுத் தோற்றங்களே உலகமாகவும் விண்மீன்களாகவும் நீண்ட ஆகாயமாகவும் தோற்றம் கொள்கின்றன என்ற இப்பாடல் கருத்து இயற்பியலின் அடிப்படையில் அமைந்துள்ளமை ஆழ்ந்து விளங்கிக் கொள்ளுதற்குரியது. இன்றைக்குப் பல்கிப் பெருகியிருக்கும் சமயங்களும் அவற்றின் இறைத் தத்துவங்களும் குறித்துப் பாவலரேறு தம் விமர்சனத்தைத் தெளிவாக உரைக்கின்றார். எந்த மதங்களும் உண்மையை முழுதாகக் காணவில்லை. எல்லா மதக்கோட்பாடுகளும் கற்பிதங்களே என்பதைப் பின்வரும் பகுதியால் விளக்குகின்றார்.

ஓவத் துணுக்கால் உருவறியார் ஒவ்வொன்றா
மேவத் துடிக்கும் மிகை உருவம் (பா.100)

பெரியதோர் ஓவியத்தைப் பலகூறுகளாக்கிய நிலையில், அவற்றின் ஒவ்வொரு கூறையும் முழுஉருவமாகக் கற்பனை செய்துகொள்ளும் கற்பிதங்களே மதங்களும் கடவுளர்களும் என்று மதங்களின் போலிமையைக் கடிந்துரைக்கின்றார். அதே பாடலில் நீர்க்குண்டோ உண்மை நிறம் என்று முடிப்பதன் வாயிலாக இறைமை தன்னை வெளிப்படுத்தி நிற்கும் உயிர்க் கூற்றானும் பொருட்கூற்றானும் வடிவமெய்துமே அன்றி தனக்கென்று ஓர் வடிவமில்லை என்னும் மெய்ப்பொருளியல் உண்மையை முற்ற முடிபாக முடித்து வைக்கின்றார்.

முடிப்புரை:
பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் உலகியல் நூறு எனும் இவ்வறநூல் தமிழிலக்கிய உலகிற்கு ஒரு புதிய புதுமையான வரவு. தமிழின் நீண்ட இலக்கியப் பரப்பில் மிகப்பலவான அறநூல்கள் எழுதப் பட்டிருந்தாலும் அவற்றிலிருந்து உலகியல் நூறு பெரிதும் மாறுபடுகின்றது. பெரிதும் திருக்குறள் கருத்துக்களை உள்வாங்கி நூல் உருவாகியிருந்தாலும் இருபதாம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சி, உலக மெய்ப்பொருளியல் அறிமுகம் முதலான புதிய பரிமாணங்களால் நூல் புதிய தளத்தில் அறம் பேசுகிறது. பாவலரேறுவின் பிரபஞ்ச ஞானம், உலகு தழுவிய பார்வை, பொதுமை வேட்கை, இறையியல் பற்றிய அறிவியல் பார்வை முதலான புதிய பாடுபொருட்கள் இந்நூலின் தனிச்சிறப்பு.

எப்படி யேனும் இத்தமி ழகத்தை
முப்படி உயர்த்திடல் வேண்டும் -என்
மூச்சதற் குதவிடல் வேண்டும்
தமிழ்ப்படி யேறின் தமிழினம் ஏறும்
தாழ்நிலை இழிவுகள் மாறும்!- நம்
தலைவிலை எனில்தரல் வேண்டும்

என்று தமிழ்மொழிக்காக, தமிழினத்துக்காக, தமிழ் நிலத்துக்காகத் தம் மூச்சையும் தலையையும் தரத் தயாராயிருந்த பாவலரேறுவின் பணி அளப்பரியது, ஒப்புயர்வற்றது, வணக்கத்திற்குரியது. பாவலரேறுவின் படைப்புகளைத் தமிழ் என்ற ஒற்றை நேர்க்கோட்டுப் பார்வையில் மட்டுமே பார்ப்பது படிப்பது பரப்புவது என்பதாக நம் பணி நின்றுவிடுதல் கூடாது. அவரின் பன்முகப் பார்வையும் பல்நோக்கும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். குறிப்பாக, பாவலரேறுவின் படைப்புகளின் சமுதாயப் பார்வை, அரசியல் பார்வை, தத்துவப் பார்வை, நடப்பியல் பார்வை, அறிவியல் மற்றும் உளவியல் பார்வை போன்ற தலைப்புகளில் அவரின் படைப்புகள் அலசப்பட வேண்டும். இம்முயற்சிகளே பாவலரேறுவின் பன்முகப் பரிமாணங்களை உலகுக்குக் காட்டும்.

புதுமைப் பித்தனும் தொன்ம மரபும்(அகலிகைக் கதைகளை முன்வைத்து)

புதுமைப் பித்தனும் தொன்ம மரபும்
(அகலிகைக் கதைகளை முன்வைத்து)

பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ,
இணைப் பேராசிரியர்,
பட்ட மேற்படிப்பு மையம்,
புதுச்சேரி - 8.

புதுமைப்பித்தன் தம் படைப்புகள் குறித்து சொன்ன வாசகங்களோடு கட்டுரையைத் தொடங்குவோம்.விமர்சகர்களுக்கு ஒரு வார்த்தை. வேதாந்திகள் கைக்குள் சிக்காத கடவுள் மாதிரிதான் நான் பிறப்பித்து விட்டவைகளும் அவை உங்கள் அளவுகோல்களுக்குள் அடைபடாதிருந்தால் நானும் பொருப்பாளியல்ல, நான் பிறப்பித்து விளையாட விட்டுள்ள ஜீவராசிகளும் பொறுப்பாளியல்ல. உங்கள் அளவுகோல்களைத்தான் என் கதைகளின் அருகில் வைத்து அளந்து பார்த்துக்கொள்ளுகிறீர்கள் என்று உங்களுக்குச் சொல்லிவிட விரும்புகிறேன். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 780)என்று புதுமைப்பித்தன் தன்படைப்புகள் குறித்து விமர்சகர்களுக்கு சொன்ன எச்சரிக்கையோடு அவரின் படைப்புகளை அணுகுவது பொருத்தமாயிருக்கும்.
இருபதாம் நூற்றாண்டு இலக்கிய வரலாற்றில் - சிறுகதை வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ள புதுமைப்பித்தனைத் தூய கலை இலக்கியவாதிகளும் சோசலிச யதார்த்தவாதிகளும் ஒருசேரச் சொந்தம் கொண்டாடுவது புதுமை. இதுவே அவர் படைப்புகளின் சூட்சுமம். புதுமைப்பித்தன் எந்தக் கூண்டுகளிலும் சிக்கிக் கொள்ளாதவர். அவர் படைப்புகள் சோசலிசம், பெரியாரியம், காந்தியம், சித்த தத்துவம் எல்லாம் பேசும், அதே சமயம் அவற்றைக் கிண்டலடிக்கவும் செய்யும். சொ.விருத்தாசலம் என்ற இயற்பெயருடைய புதுமைப்பித்தன் வேறு பல புனைபெயர்களிலும் பத்திரிக்கைகளுக்கு எழுதியுள்ளார். சோ.வி., வே.கந்தசாமிக் கவிராயர், ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராச்சாரி என்பன அவரின் சில புனைபெயர்கள். நூற்றுக்கும் மேற்பட்ட சொந்தச் சிறுகதைகள் படைத்ததோடு மட்டுமின்றி சுமார் நூறு மொழிபெயர்ப்புச் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், குறுநாவல், திரைப்பட உரையாடல் என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தம் படைப்புகளை உருவாக்கியவர் புதுமைப்பித்தன். புதுமைப்பித்தன் தன் கதைகளின் பொதுத்தன்மை நம்பிக்கை வறட்சி என்று சொல்லிக்கொண்டார், அதற்குக் காரணம் அவரின் வாழ்க்கைப் பின்னணி. அவரின் நம்பிக்கை வறட்சி மனிதர்கள் உண்டாக்கிய தர்மங்கள் குறித்ததாயிருந்தது. சாமான்ய மனிதர்களின் நடைமுறை வாழ்க்கையும் அவற்றின் அவலங்களும் அவரின் சிறுகதைகளில் அதிக இடங்களைப் பிடித்தன. சமூகத்தின் மீதான புதுமைப்பித்தனின் கோபமே, அவர் படைப்புகளில் கேலியாக, கிண்டலாக, நையாண்டிகளாக வெளிப்பட்டன. எத்தகைய அறங்களின் மீதும் தமக்கு நம்பிக்கையில்லை என்பதுபோல் அவர் காட்டிய பாசாங்கெல்லாம் சமூகம் குறித்த அவரின் எதிர்வினையே. புதுமைப்பித்தன் ஆங்கில வழியில் உலகின் பலமொழிப் புனைகதைகளைக் கற்றார். தமிழிலும் உயர்ந்த தரத்தில் சிறுகதைகளைப் படைக்க விரும்பி ஒவ்வொரு சிறுகதையையும் ஒரு சோதனை முயற்சி போல் செய்து பார்த்தார். அதனால்தான் அவர் கதைகள் எதுவும் ஒன்று போல் மற்றொன்று இருப்பதில்லை. தம்முடைய கதைகளை வெறும் சுவாரஸ்யத்திற் காகவோ கருத்துப் பிரச்சாரத்துக்காகவோ அவர் படைக்கவில்லை. புதுமைப்பித்தனின் ஒவ்வொரு கதையும் ஒரு பிரச்சனையைப் பேசும். பாத்திரங்களையோ, பிரச்சினைகளையோ மோதவிட்டுவிட்டுத் தன்னை இனங்காட்டிக் கொள்ளாமல் ஒதுங்கிக் கொள்வார். இது அவர்படைப்பின் பாணி. ஒரு தமிழ்வாசகன் புதுமைப்பித்தன் எழுத்துக்களுக்குள் எளிதில் நுழைந்து படைப்பை அனுபவிக்க முடிவதற்கு அவரின் விசேடமான கதைசொல்லும் முறையே ஒரு முக்கிய காரணம். தொன்ம வேர்முடிச்சுகளால் காப்பாற்றப் படும் இந்தியமரபு இழையோடும் மொழியும் கதையாடலுமே புதுமைப் பித்தன் கதைகளின் தனித்தன்மை. இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளும் சைவத் தமிழ் மரபும் கலந்து புதுமைப்பித்தனின் எழுத்துலகை ஆட்சி செய்வது வாசகர் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தது.

தொன்மம்:
இலக்கியவியல், உளவியல், மானிடவியல், சமூகவியல், மதஒப்பியல், நாட்டுப்புறவியல் போன்ற பல துறைகளில் தொன்மம் சொல் பயன்படுத்தப்படுகிறது. திறனாய்வுத்துறையின் முன்னோடி நார்த்ராப் பிரையின் தொன்மம் குறித்த விளக்கங்கள் முக்கியத்துவம் வாய்ந்தவை. தொன்மம் கடவுளர்களையோ கடவுளையொத்த மனிதர்களையோ பாத்திரங்களாகக் கொண்ட கதையென்றும் அது வரலாற்றுக் காலத்திற்கு அப்பாற்பட்டதென்றும் இயற்கையிழந்த நிகழ்ச்சிகளைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும் என்றும் கூறுவார். தொன்மங்கள் அதிக சிரத்தையோடு எடுத்துக்கொள்ளப்பட வேண்டியவை, உண்மையிவேயே நிகழ்ந்ததாக நம்பப்படுபவை. எல்லா இலக்கிய வகைகளும் தொன்மத்திலிருந்தே தோற்றமுற்றன என்பது அவர் கருத்து. ( பா.மருதநாயகம், தொன்மத் திறனாய்வு, ப-ள். 12-13)
இலக்கியப் படைப்பிற்கான அடிக்கருத்துக்கள் எல்லாமும் தொன்மங்களிலிருந்தே தோற்றம் பெற்றன என்று நார்த்தராப் பிரையின் கருதுவார். பெரும்பாலும் தொன்மங்கள் மனிதன், விலங்கு, தாவரம் ஆகியவற்றின் தோற்றம் பற்றியும் மனிதன் எவ்வாறு இப்பொழுது உள்ள நிலைக்கு, அதாவது இறப்பு, பால்உணர்வு, பலவகையான சமூகக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கு ஆட்பட்டவனாக வந்து சேர்ந்தான் என்பன பற்றியும் விளக்குகின்றன. விகோ(ஏiஉழ) எனும் அறிஞர் தமது புதிய விஞ்ஞானம் எனும் நூலில் நுண்ணிய சிந்தனைகள் தொன்மக் கருத்துக்களிலிருந்தே வெளிப்படுகின்றன என்றும் கவிதைக்கு இதுவே அடிப்படை என்றும் மனிதன் கற்கவேண்டிய முதல் விஞ்ஞானம் தொன்மமே என்றும் சுட்டிக் காட்டினார். அவர் கருத்தில் தொன்மங்கள் என்பவை உண்மையான நிகழ்ச்சிகள் அல்லது வரலாற்று நிகழ்ச்சிகளின் கற்பனை வடிவங்கள் ஆகும். ( பா.மருதநாயகம், தொன்மத் திறனாய்வு, ப. 7)தொன்மங்களை உருவாக்கியவர் யார்? என்ற கேள்விக்கு உளவியல் அறிஞர் யுங் தரும் விளக்கம் ஆழமானது, மனித இனம் முழுவதற்கும் பொதுவான அடிமனக்கூறு ஒன்று உண்டென்றும் அதிலிருந்தே தொன்மங்கள் வெளிப்படுகின்றன என்றும் யுங் கருதினார். எனவேதான் பலநாட்டுப் பல இனமக்களிடமும் காணப்படும் தொன்மங்களில் வியத்தகு ஒற்றுமைகளைக் காணமுடிகிறது என்று அவர் விளக்கமளித்தார். ‘புராணங்களிலும் இதிகாசங்களிலும் வெளிப்படுவது ஒரு குறிப்பிட்ட தனிநபரின் தனிச்சிந்தனை அல்ல, மக்களின் கூட்டுச்சிந்தனையே ஆகும்’ என்று மாக்சிம் கார்க்கியும் தொன்மங்களை விளக்கியுள்ளார். ஆரம்பக் காலத்து மனிதம், தான் எதிர்கொண்ட இயற்கையைத் தன் காலத்திய அறிவினால் புரிந்து கொள்ள முயன்ற முயற்சியின் வெளிப்பாடே இத்தொன்மங்களாகும். மனித மனத்தின் கற்பனை ஆற்றலையும் வாழ்க்கை அனுபவத்தின் மூலம் வெடித்த முதல் கலை அமைப்பையும் இத்தொன்மங்கள் வெளிப்படுத்தி நின்றன. பின்னால் வர்க்க சமுதாயம் உருவான போது இந்தத் தொன்மங்களில் இருந்துதான் மதக் கடவுள்களுக்கான கதைகள் மாற்றி உருவாக்கம் செய்யப்பட்டன. (க.பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, ப.ள். 114-115)
தொன்மங்கள் இறுகிய பாறைகள் அல்ல. உயிர்த் துடிப்புள்ளவை, சமூகம், காலத்துத் தேவைகளுக்கேற்ப தொன்மங்களைப் பயன்படுத்திக் கொள்கிறது. சமூகம் மட்டுமல்ல சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும் அவரவர்களின் கருத்துலகிற்கு ஏற்பத் தொன்மங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றன. இந்தியச் சூழலில் ஆரிய திராவிட அரசியல் நிலைப்பாடுகளுக்கு இத்தொன்மங்களே களங்களாயின. ஊடகங்கள் இந்துத்துவ பெருமரபைத் தூக்கிப் பிடிக்க இத்தொன்மங்களைப் பயன்படுத்துகின்றன. படைப்பாளிகளும் தொன்மங்களையே படைப்பின் அடிக்கருத்துக்களாகவும் பரப்புரைகளாகவும் உத்திகளாகவும் அமைத்து வெற்றி பெறுகின்றார்கள். எனவேதான் ரெனிவெல்லாக், ‘உலகப் புகழ்பெற்ற படைப்புகள் எல்லாம், புதிதாகக் கதையை உருவாக்கிப் படைக்கப்பட்டவைகளை விட, பழைய தொன்மங்களின் மேல் மறுபடைப்புச் செய்யப் பட்டவைகளாகவே இருக்கின்றன’ என்கிறார். (க.பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, ப. 118)உலக இலக்கியப் பயிற்சி மிக்க புதுமைப்பித்தனும் தொன்மமரபுகளை மறுஆக்கம் செய்யும் படைப்பு உத்தியைத் தம் சிறுகதைகள் பலவற்றில் கையாண்டு வெற்றி பெற்றுள்ளார். புதுமைப்பித்தன், இந்தியத் தொன்மங்களில் பரந்த வீச்சுடைய இராமாயணக் கதையை விகடக்கதையாக்கிப் பகடி பண்ணுகிறார். இராமாயணக் கதையைத் தலைகீழாக்கி விகடம் பண்ணுவதற்குப் பாரதியைத்தான் முன்னோடி எனச் சொல்ல வேண்டும். நிஜமான ராமாயணக் கதை என்று அவரே கிண்டலாகக் குறிப்பிடும் அவருடைய குதிரைக் கொம்பு என்ற கதையில் இராவணன் கதைத் தலைவன், இராம- லக்குமணர் எதிரிகள், மூத்தவன் பரதனுக்குப் பட்டம் கட்டக்கூடாது, தனக்கே கட்டவேண்டும் என்று இராமன் லக்குவணோடு சேர்ந்து கலகம் பண்ணுகிறான். இதனால் நாட்டைவிட்டுத் துரத்தப்படுகிறான். போகும்போது இராமன் சீதையைத் தூக்கிச் செல்ல, தொடர்ந்து சென்று இராவணன் சீதையை மீட்கிறான். முடிவில் இராம- லக்குமணர்கள் திருந்துகிறார்கள்! புதுமைப்பித்தனின் நாரத ராமாயணம், இராஜாஜியின் பச்சாதாபம் கதைகளுக்குப் பாரதியின் குதிரைக்கொம்பு முன்னோடியாகக் காணப்படுகிறது. (ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்சஸ், ப.20)இப்படித் தொன்மக் கதைமரபுகளை நவீன உத்தியால் கேலிச் சித்திரங்களாக்கிப் பகடி பண்ணுவது மேலை இலக்கிய படைப்பாக்க உத்திகளிலிருந்து பெறப்பட்டது.
காலந்தோறும் தொன்மங்கள் மறுபடைப்பாக்கம் பெறுவது எல்லா மொழி இலக்கியங்களிலும் வழக்கமானதுதான் என்றாலும் புதுமைப்பித்தன் போன்றவர்கள் தொன்ம மரபுக் கதைகளைத் தம் படைப்பாக்கத்திற்குப் பயன்படுத்தும்போது புதிய மதிப்பீடுகளை அத்தொன்மங்களில் இடம்பெறச் செய்வதோடு புதிய விமர்சனங்களையும் அதனுள் பொதித்து வைக்கின்றார்கள். புதுமைப்பித்தன் தம் எழுத்துக்கள் முழுவதிலும் இந்தியத் தொன்ம இதிகாச மரபுகளையும் சைவத் தமிழ் தொன்மமரபுகளையும் ஊடுபாவாகக் கையாளுகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட அவருடைய படைப்புகளில் மறுஆக்கம் செய்யப்பெற்ற தொன்மங்கள் பல என்றாலும் எல்லை கருதி இராமாயணம், மகாபாரதம் என்ற இரண்டு இதிகாசங்களிலும் இடம்பெறும் அகலிகைத் தொன்மமரபைப் புதுமைப்பித்தன் எவ்வாறு கையாண்டுள்ளார் என்பதை இக்கட்டுரை ஆய்கிறது.

அகலிகைத் தொன்மம்:
வடமொழியில் முதல்காவியம் செய்த வான்மீகியே முதன்முதலில் அகலிகைக் கதைக்கு இலக்கிய உருவம் கொடுத்தார். வான்மீகி சொன்ன கதை இது,மகாமுனி கௌதமரும் அகலிகையும் ஆசிரமம் அமைத்து வாழ்ந்து வந்தனர். அகலிகையின் அழகில் மயங்கிய இந்திரன் அவளை அடையும் நோக்கத்துடன் ஒருநாள் கௌதமன் ஆசிரமத்தில் இல்லாத நேரம் பார்த்து கௌதமனாகி உருமாறி வந்து நாம் இப்போதே கூடுவோம் என்றான். வந்திருப்பது கணவன் இல்லை, தேவேந்திரனே என்பதைத் தெரிந்துகொண்ட அகலிகை, இந்திரனே நம்மைத் தேடிவந்துள்ளானே என்று தன் அழகைப்பற்றி கர்வப்பட்டு அவனுக்கு உடன்பட்டாள்.பிறகு தேவேந்திரனே விரைந்து புறப்படு, அபாயத்திலிருந்து உன்னைக் காத்துக்கொள் என்று எச்சரித்து அனுப்ப, உனக்கு நன்றி என்றுகூறி தேவேந்திரன் புறப்படும் வேளையில் அங்குவந்த கௌதமன் இந்திரன் வேடத்தைக் கண்டு நடந்தவற்றை உணர்ந்துகொண்டார்.மூடனே! என் வேஷத்தைத் தரித்துக்கொண்டு ஆசிரமத்தில்புகுந்து தகாததைச் செய்த நீ ஆண்மை இழக்கக்கடவாய் என்று இந்திரனுக்கு சாபமிட்டார். அகலிகையே! நீ இங்கே நீண்டகாலம் காற்றே உணவாக எந்தவொரு ஆகாரமுமின்றிச் சாம்பல்மேல் படுத்து யார் கண்ணுக்கும் தென்படாமல் மறைந்து வசிப்பாயாக. பலகாலம் கழித்து இங்கு வரப்போகும் இராமன் பாதம் ஆசிரமத்தில் படும்போது உன் பாவம் நீங்கும் என்று அகலிகைக்குச் சாபமிட்டார்.
தமிழில் முதன்முதலில் அகலிகைத் தொன்மம் இடம்பெற்ற நூல் பரிபாடல். மிகச்சுருக்கமாக அகலிகைக் கதை இந்நூலில் இடம்பெற்றுள்ளது. திருப்பரங்குன்றத்தில் உள்ள ஓவியச் சாலையில் இடம்பெற்றுள்ள பல ஓவியங்களைக் கண்டு வருவோர், இந்த ஓவியத்தைச் சுட்டிக்காட்டி, இந்திரன் ப+சை இவள் அகலிகை இவன் சென்ற கவுதமன் சினனுறக் கல்லுருஒன்றிய படியிதென்று உரை செய்வோரும் (நப்பண்ணனார், பரிபாடல், பா. 19)‘இவ்வுருவம் பூனைவடிவமெய்திய இந்திரனது, இவள் அகலிகை, இவன் கௌதமன், இவன் கோபித்தலால் இவள் கல்லுருவானவாறு இது’ என்று மக்கள் பேசிச்சென்ற காட்சியை வருணிக்கும் பகுதியில் அகலிகைக் கதை இடம்பெற்றுள்ளது. இந்திரன் பெற்ற சாபம் பற்றிய குறிப்பு இப்பகுதியில் இடம்பெறவில்லை, ஆனால் பரிபாடலின் ஒன்பதாம் பாடலில் குன்றம்ப+தனார் செவ்வேளின் மனைவி தேவசேனையைக் குறிக்குமிடத்தில் ‘ ஐயிரு நூற்று மெய்ந் நயனத்தவன் மகள்’ என்று குறிப்பிடும் இடத்தில் இந்திரன் ஆயிரம் கண்ணுடையவன் என்று சுட்டப்படுவதால் இந்திரன் சாபம் நினைவுக்கு வருகின்றது. பரிபாடல் கூறும் வடிவத்திலேயே கம்பர் தம் இராமகாதையில் இக்கதையை விவரித்துள்ளார். கௌதமருடைய சாபத்தைப் பொருத்தவரையில் வான்மீகத்திலிருந்து வேறுபடும் கம்பர் அகலிகையின் பாத்திரப்படைப்பிலும் மிக முக்கியமானதொரு மாற்றத்தைச் செய்கின்றார். தவறிழைத்த அகலிகையைக் கம்பன், ‘நெஞ்சினால் பிழைப்பிலாதாள்’ என்றே விசுவாமித்திரர் வாயிலாகக் குறிப்பிடுகின்றான். அதுமட்டுமின்றி, சாபவிமோசனத்திற்குப் பின் இராமன் கௌதமரை வணங்கி, ‘மாசறு கற்பின் மிக்க அணங்கினை அவன்கை ஈந்து’ தன் பயணத்தைத் தொடர்ந்ததாகவும் குறிப்பிடுகின்றான் கம்பன். கம்பன் செய்த இந்த மாற்றங்களுக்குப் பிறகு அகலிகைத் தொன்மம் வடமொழித் தொன்மத்திலிருந்து தமிழ்த் தொன்மமாக மாற்றம் பெறுகின்றது.
கம்பருக்குப் பின்னர் அகலிகைத் தொன்மத்தை விரிவான வகையில் தனிநூலாக இருநூற்றுத் தொண்ணூற்றைந்து வெண்பாக்களால் உருவாக்கித் தந்தவர் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார். அவர் செய்த நூல் அகலிகை வெண்பா. இருபதாம் நூற்றாண்டில் அகலிகைத் தொன்மம் மீண்டும் மீண்டும் பலராலும் மறுபடைப்பாக்கம் செய்யப் பெற்றுள்ளது. அப்படைப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் குறிப்பிடத் தக்க படைப்பாக விளங்குகின்றன. புதுமைப் பித்தனும் அகலிகைத் தொன்மமும்: அகலிகைத் தொன்மத்தைக் கையாண்டு அகல்யை, சாப விமோசனம் என்ற இரண்டு சிறுகதைகளைப் படைத்துள்ளார் புதுமைப்பித்தன். அகலிகைத் தொன்மத்தைப் பொறுத்தமட்டில் இருவேறு மரபுகள் காணப்படுகின்றன. ஒன்று வடமொழி அகலிகைத் தொன்ம மரபு, மற்றொன்று தமிழ் அகலிகைத் தொன்ம மரபு. இப்படி இருவேறு மரபுகளாகக் கணக்கில் கொள்ளும் வகையில் இரண்டு மரபுகளும் மாறுபடுகின்றன. வடமொழி அகலிகைத் தொன்மத்தில் வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தே அவனுடன் கூடுகிறாள் அகலிகை, கல்லாகும் சாபம் அவளுக்கு இல்லை. தமிழ் அகலிகைத் தொன்மத்தில் வந்திருப்பது இந்திரன் என்று அறியாமல் கணவன் என்று நினைத்தே அகலிகை அவனுடன் கூடுகிறாள். மனதால் களங்கமற்றவள் என்று சித்தரிக்கப்படுகிறாள். கௌதமனால் கல்லாகுமாறு சபிக்கப்படுகிறாள். இந்த இருவகை அகலிகைத் தொன்மங்களும் இருபதாம் நூற்றாண்டின் நவீன படைப்பாளிகளுக்கு பயன்படுகின்றன. புதுமைப்பித்தன் இவற்றில் அகலிகைத் தமிழ்த் தொன்ம மரபையே தம் படைப்புகளில் பயன்படுத்துகின்றார். முதல்கதை அகல்யை 1934-இல் எழுதப்பட்டது. இரண்டாம் கதை சாபவிமோசனம் 1943-இல் எழுதப்பட்டது. இரண்டு கதைகளும் படைப்புத் தளத்தில் வேறு வேறு கோணங்களில் படைக்கப்பட்டுள்ளன. முதல்கதை அகல்யாவில் வரும் பாத்திரங்களான அகலிகை, கௌதமர், இந்திரன் என்ற பெயர்கள்தாம் தொன்மப்பெயர்கள், சம்பவங்கள் எல்லாம் இயற்கையானவை. இயற்கை இகந்த புனைவுகளே கதையில் இல்லை. இந்திரன் கோழிபோல் கூவுகிறான், கோழியாக வடிவெடுத்து வரவில்லை. இந்திரன் பூனைபோல் மெதுவாக வருகிறான், பூனையாகவில்லை. இந்திரன் இந்திரனாகவே அகலிகையைக் கூடுகிறான், கௌதமன் வேடத்தில் வரவில்லை. அகலிகை கல்லாகவில்லை, இந்திரன் சாபம் பெறவில்லை, இந்திரனை கௌதமர் மன்னித்துவிடுகிறார். கதை முழுமையும் நடப்பியலோடு இணைந்துசெல்கிறது. கௌதமர்தான் இலட்சியக் கதாபாத்திரமாகிறார். ‘மனத் தூய்மையில்தான் கற்பு. சந்தர்ப்பத்தால் உடல் களங்கமானால் அபலை என்ன செய்ய முடியும்.’ (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 135) கௌதமரின் இந்தக் கேள்வி கற்பொழுக்கம் பற்றிய புதிய விளக்கத்தை வாசகனுக்குத் தருகிறது. கௌதமரின் இந்த வாசகத்தை இருபதாம் நூற்றாண்டின் கற்புக் கோட்பாடு எனலாம். மனத் தூய்மைதான் கற்பு, உடல் களங்கம் கற்புக்கேடு ஆகாது என்ற இக்கூற்றைக் கொஞ்சம் ஆழ்ந்து நோக்கலாம். உடல் களங்கம் என்பதில் வரும் களங்கம் என்றசொல் கற்பு பற்றிய பழைய தொன்மங்களை அப்படியே போற்றிப் பாதுகாக்கின்றமையை உணரமுடியும். தூய்மை, களங்கம் என்ற இரண்டு சொற்களும் பெண்உடல் குறித்த ஆண்மைய வாதங்களையே இங்கு முன்வைக்கின்றது.
இரண்டாவது கதை சாப விமோசனம். அகலிகை, இராமனால் சாப விமோசனம் பெற்றபின் வாழ்ந்ததாகப் புதுமைப்பித்தனால் கற்பனை செய்யப்பட்ட வாழ்க்கையைப் பேசுகிறது இக்கதை. இதிகாசக் கதையாகவே, இதிகாசக் கதையின் நீட்சியாகவே இதனைப் படைக்கிறார் புதுமைப் பித்தன். சாப விமோசனம் புதுமைப்பித்தன் படைப்புகளில் தனிச்சிறப்புடையது, தமிழின் மிகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகப் பேசப்படுவது. கதையைத் தொடங்குமுன்னே ‘ராமாயண பரிச்சய முள்ளவர்களுக்கு இந்தக்கதை பிடிபடாமல் (பிடிக்காமல் கூட) இருக்கலாம். அதை நான் பொருட்படுத்தவில்லை.’ ஆசிரியரின் இத்தனிக்கூற்று முன்னுரையாக இடம்பெற்றுள்ளது. அகலிகை இராமனால் சாப விமோசனம் பெறுவதில் கதை தொடங்குகிறது. இராமன் கால்துகள் பட்டுச் சிலை பெண்ணாகிறது. ‘நெஞ்சினால் பிழை செய்யாதவளை நீ ஏற்றுக் கொள்வதுதான் பொருந்தும்’ (மேற். நூ. ப.529) என்கிறார் விசுவாமித்திரர் கோதமனிடம். கோதமன் அகலிகை வாழ்க்கை மீண்டும் தொடங்குகிறது. அகலிகை மனதால் களங்கமற்றவள் என்பதை கோதமர் ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ஊர் உலகம் அவளைத் தூற்றுகிறது. ‘சாப விமோசனம் கண்டாலும் பாப விமோசனம் கிடையாதா? ‘ (மேற். நூ. ப.535) இராமாயணக் கதை நெடுகிலும் அகலிகைக் கதை தொடர்கிறது. சீதை சிறை மீட்புக்குப் பின் சீதையும் இராமனும் ஒருநாள் அகலியைக் காண வருகின்றனர். அகலிகை சீதை இவர்களின் தனித்த உரையாடலில் இலங்கையில் நடந்த சம்பவங்களைச் சீதை சொல்லிக்கொண்டிருந்தாள். சாப விமோசனம் கதையின் உச்சம் இப்பகுதி,அக்கினிப் பிரவேசத்தைச் சொன்னாள். அகலிகை துடித்துவிட்டாள்.அவர் கேட்டாரா? நீ ஏன் செய்தாய் என்று கேட்டாள்.அவர் கேட்டார், நான் செய்தேன் என்றாள் சீதை அமைதியாக.அவன் கேட்டானா? என்று கத்தினாள் அகலிகை, அவள் மனசில் கண்ணகி வெறி தாண்டவமாடியது. அகலிகைக்கு ஒரு நீதி, அவனுக்கு ஒரு நீதியா? ஏமாற்றா? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? இருவரும் வெகுநேரம் மௌனமாக இருந்தனர்.உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா? என்றாள் அகலிகை. வார்த்தை வறண்டது.நிரூபித்துவிட்டால் மட்டும் அது உண்மையாகிவிடப் போகிறதா, உள்ளத்தைத் தொடவில்லை யானால்? நிற்கட்டும், உலகம் எது? என்றாள் அகலிகை. (மேற். நூ. ப.539) மனதால் களங்கமற்று இருந்தாலே போதும் என்று அகலிகைக்கு பேசப்பட்ட அறம், சீதை விசயத்தில் உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்றாகிறதே, ஏன்? அகலிகைக்கு ஒரு நீதி அவனுக்கு ஒரு நீதியா? ஊருக்கு உபதேசம் செய்துவிட்டுத் தன் மனைவி என்கிற போது நியாயம் ஏன் மாறுகிறது? எது மாற்றுகிறது? கோதமன் சாபம் குடலோடு பிறந்த நியாயமா? என்று கொதிக்கும் அகலிகை மீண்டும் கல்லாகிறாள்.
புதுமைப்பித்தனின் இந்தச் சாப விமோசனம் கதை ஆழ்ந்து படிப்போர்க்கு இரண்டு சிக்கல்களை எழுப்பியிருப்பதாக க. கைலாசபதி கருதுகிறார்.

1. நெருக்கடி ஏற்படும் பொழுது கணவன் மனைவி உறவுப் பிரச்சனை எப்படித் தோன்றுகிறது, அதாவது மனித உறவுகள் பற்றிய சிக்கல்.

2. ஒழுக்கம், அறம் என்பவைக்கும் வாழ்க்கைக்கும் எவ்வாறு முரண்பாடு தோன்றுகிறது, அதாவது அறவியல் - பெற்றுள்ள வலிமை பற்றிய சிக்கல் (க.கைலாசபதி, அடியும் முடியும், ப.156)

மனித உறவுகள் பற்றிய சிக்கலையும், அறவியலின் வலிமை பற்றிய சிக்கலையும் பேசும் சாப விமோசனம் இச்சிக்கல்களுக்கு வெளிப்படையாக விடைகூறவில்லை என்பார் கைலாசபதி. அகலிகைத் தொன்மத்தை மறுபடைப்பாக்கம் செய்த பலரும் உளவியல் நோக்கிலேயே இத்தொன்மத்தை அணுகியுள்ளார்கள். புதுமைப்பித்தனும் சாப விமோசனம் பெற்ற பின்னர் அகலிகை, கோதமன் இருவரின் மனதிலும் இழையோடும் குற்ற உணர்ச்சி பற்றிப் பலபடப் பேசுகிறார். அகலிகைக்கு அச்ச உணர்ச்சியே மேலோங்கி நின்றது. இயல்பான பேச்சு இல்லை, மற்றவர் பேச்சையும் இயல்பாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அகலிகைக்கு பயம் நெஞ்சில் உறையேறிவிட்டது. ஆயிரம் தடவை மனசுக்குள் திருப்பித் திருப்பிச் சொல்லிப் பாடம் பண்ணிக்கொண்டு, அந்த வார்த்தை சரிதானா என்பதை நாலு கொணத்திலிருந்தும் ஆராய்ந்து பார்த்துவிட்டுத்தான் எதையும் சொல்லுவாள். கோதமன் சாதாரணமாகச் சொல்லும் வார்த்தைகளுக்குக் கூட உள்ளர்த்தம் உண்டோ என்று பதைப்பாள். (பதி.ஆ. வேங்கடாசலபதி, புதுமைப்பித்தன் கதைகள், ப. 531)கோதமனுக்கு அவளிடம் முன்போல் மனக் களங்கமின்றிப் பேச நாவெழவில்லை. அவளை அன்று விலைமகள் என்று சுட்டது, தன்நாக்கையே பொசுக்க வைத்துவிட்டது போல இருக்கிறது. என்ன பேசுவது? என்ன பேசுவது? … இருவரும் இருவிதமான மனக்கோட்டைக்குள் இருந்து தவித்தார்கள்.கோதமனுக்குத் தான் ஏற்றவளா? என்பதே அகலிகையின் கவலைஅகலிகைக்கு தான் ஏற்றவனா என்பதே கோதமனின் கவலை (மேற். நூ. ப.530)சேர்ந்து வாழ்ந்தாலும் இருவரும் இரண்டு விதமான மனக்கோட்டைகளுக்குள் வாழ நேர்ந்ததால் ஏற்படும் உளவியல் சிக்கல்களே சாப விமோசனம் கதையின் முதல்பாதி.
சாப விமோசனம் கதையின் இரண்டாம் பாதி, இராமன் கதை என்ற ஒற்றைத் தொன்மத்திற்குள் இயங்கும் சீதை, அகலிகை என்ற இரட்டைத் தொன்மங்களைக் குறித்தது. அதாவது சீதைத் தீக்குளிப்பு ஒரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- நெருப்பு- உலகம் என்பதோடு தொடர்புடையது. அகலிகை கல்லுயிர் பெறல் மற்றுமொரு தொன்மம், இத்தொன்மம் கற்பு- உடல்-மனம் என்பவற்றோடு தொடர்புடையது. இந்த இரண்டு தொன்மங்களையும் இணைக்கும் தொன்மம் இராமன் குறித்த தொன்மம். சீதை, அகலிகை என்ற இரண்டு தொன்மங்களுக்குள் இயங்கும் செயல்பாடுகள் ஒரே வாய்பாட்டில் இயங்குகின்றன. ஒத்த வாய்பாட்டில் இயங்கும் இக்கதைகளில் மாறுபடும் மதிப்பீடுகள் குறித்த விசாரணையே புதுமைப்பித்தனின் சாப விமோசனம் முன்வைக்கும் சிக்கல். இச்சிக்கல் அகலிகை வழியாக எழுப்பப்படுகிறது. தொன்மத்தில் இது அகலிகையின் குரலாக ஒலித்தாலும், வரலாறு நெடுகிலும் பெண்களின் ஒற்றைக் குரலாகவே எதிரொலிக்கின்றது.

சீதை, அகலிகைத் தொன்மங்களின் செயல்பாடுகள்:
1. சீதை கடத்தல்
தீக்குளிப்பு மரணம்
இராமன் இராவணன்

2. அகலிகை பாலுறவு
கல்லாதல் சாபம்
கோதமன் இந்திரன்

மேலே உள்ள வரைபடங்கள், இரண்டு தொன்மங்களும் செயல்பாடுகளின் வழி ஒரே வாய்பாட்டில் இயங்குவதை உணர்த்துகின்றன. இரண்டு தொன்மங்களிலும் இராமனும் கோதமனும் பரிசுத்தமானவர்களாக இருக்கின்றனர். ஆண்கள் பரிசுத்தமாயிருக்கும் போது பெண்களும் அப்படியிருக்க வேண்டும் என்று நினைப்பதில்- நிர்ப்பந்திப்பதில் என்ன தவறு? என்பது போன்ற தர்க்கம் இரண்டு தொன்மங்களிலும் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் இராவணன், இந்திரன் ஆகிய இரண்டு ஆண்களின் பாலியல் மீறல்கள் ஓரங்கட்டப்படுகின்றன. ஆண்களின் பாலியல் மீறல்கள் உள்ள சமூகத்தில் பெண்கள் உடலாலும் மனத்தாலும் களங்கப்படாமல் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது எப்படிச் சாத்தியமாகும். ‘ஆப்பிளின் ஒரு பாதியைத் தின்றுவிட்ட பிறகு முழு ஆப்பிளைக் கையில் வைத்திருக்க முடியாது என்பதைப்போல்’ என்று இதனை விளக்குவார் எங்கல்ஸ் (எங்கல்ஸ், குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம், ப.110) சீதையின் தீக்குளிப்பு அகலிகையின் மனதில் கோபக்கனலை எழுப்பிவிடுகிறது. அவர் கேட்டாரா? என்று இயல்பாகத் தொடங்கிய அகலிகையின் பேச்சில் இராமன்தான் கேட்டான் என்று தெரிந்ததும் அவன் கேட்டானா? என்று அனல் வீசத் தொடங்குகிறது. இதனைக் கண்ணகி வெறி என்கிறார் புதுமைப்பித்தன். தீக்குளிப்பு பற்றிய சீதையின் எதிர்வினை என்னவாக இருந்தது? அகலிகைபோல் வெளிப்படையாக எதிர்க்குரல் எழுப்பவில்லை சீதை. மாறாக, ‘உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று கூறி மெதுவாகச் சிரித்தாள் சீதை.’ என்ற புதுமைப்பித்தன் வரிகளில் வரும், மெதுவாகச் சிரித்தாள் என்பதில் சீதையின் கேலியும், கிண்டலும், கோபமும், ஆத்திரமும், இயலாமையும், அழுகையும் அடுக்கடுக்காக வெளிப்படுவதை உணரமுடியும். உலகத்துக்கு நிரூபிக்க வேண்டாமா? என்று வேண்டுமென்றே அகலிகையின் கோபத்தைக் கிளறிவிடும் வார்த்தையைக் கையாளுகிறாள் சீதை. தான் பேசாததை யெல்லாம், பேச வேண்டியதை யெல்லாம் அகலிகை பேசுகிறாள் என்பதால். பேசட்டும்.. பேசட்டும்.. வரலாற்றின் வழிநெடுகிலும் ஒடுக்கப்பட்ட பெண்களின் குரல், குரல்வளை நெறிக்கப்பட்ட பெண்களின் கோபக்குரல், உள்ளுக்குள் மகிழ்கிறாள் சீதை. சீதையின் மௌனம், சீதை பேசாத பேச்சு அது. புதுமைப்பித்தன் கையாண்ட எத்தனையோ தொன்ம மரபுகளில் அகலிகைத் தொன்மம் மிகுந்த தனித்துவம் உடையது. அகலிகை மீண்டும் கல்லானது உளவியல் சார்ந்தது என்றாலும், அறங்கள் குறித்த அகலிகையின் விசாரணை சமூகம் பற்றியது, சமூகக் கட்டுமானங்கள் பற்றியது. சாப விமோசனத்தில் அகலிகை இரண்டு விவாதங்களைத் தொடங்கி வைக்கிறாள்.

1. மனிதனா? தர்மமா? எது முக்கியம் என்ற வினா.
2. இரண்டாவது, உள்ளமா? உலகமா?

இரண்டில் எதற்கு நாம் உண்மையாய் இருக்க வேண்டும் என்ற வினா. கைகேயியிடம் உரையாடும் தருணத்தில் அகலிகை தர்மங்கள் குறித்த சர்ச்சையைக் கிளப்புகிறாள், ‘மனிதருக்குக் கட்டுப்படாத தர்மம், மனித வம்சத்துக்கு சத்துரு’ இது அகலிகையின் வாதம். இவ்வாதத்தில் தர்மத்துக்கு முதன்மையில்லை, மனிதத்திற்கே முதன்மை. ‘உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகத்துக்கு நிரூபிக்க முடியுமா?’ என்ற வாதத்தில் அகலிகை உள்ளமா? உலகமா? என்ற வினாவிற்கு அவளே விடையும் கூறுகிறாள். உலகம் எது? என்ற அகலிகையின் கேள்வியே இதற்கு பதிலாகிறது. காலம், இடம், நபர் சார்ந்து உண்மைகள் மாறுபடும் போது உலகம் என்பது எது? என்ற கேள்வி எழுகிறது.

பெண் - கற்பு:
புதுமைப்பித்தன் மற்றும் இன்னபிற இருபதாம் நூற்றாண்டு எழுத்தாளர்கள் பலரையும் அகலிகைத் தொன்மம் கவர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் ஆங்கிலக் கல்வியால் நம்மவர்கள் பெற்ற பெண்ணுரிமை குறித்த விழிப்புணர்வே. 19 ஆம் நூற்றாண்டில் கால்கொண்ட பெண்ணுரிமை விழிப்புணர்வு இருபதாம் நூற்றாண்டுப் படைப்பாளிகளால் அவரவர் சார்புகளுக்கேற்பே வளர்த்தெடுக்கப்பட்டது. இதிகாச, புராணத் தொன்மங்களால் கட்டமைக்கப்பட்ட பெண்-கற்பு பற்றிய மதிப்பீடுகள் அந்தத் தொன்மங்களின் துணையோடே விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன. பெண்கற்பை- பெண்ணடிமையை வலியுறுத்துவதில் தொன்மங்கள் மிகுந்த பங்காற்றுகின்றன. புராண இதிகாசத் தொன்மங்கள் பெண்- பெண்உடல்- பாலியல் மீறல்கள்- தண்டனைகள் என்ற ஒவ்வொன்றின் வழியாகவும் பெண்களை இறுக்கிக் கொண்டே வந்தன. தொன்மங்களில் இடம் பெற்ற ரிஷி, ரிஷிபத்தினி பற்றிய கதைகளில் இந்த வளர்நிலைகளைக் காணலாம்.

1. தாருகாவனத்து ரிஷிகள் அவர்கள் பத்தினிகள் பற்றிய கந்தபுராணக் கதைக் குறிப்புகளில், சிவபெருமான் பிச்சாடண கோலத்தில் பிறந்த மேனியாய் தாருகாவனத்தில் பிச்சையெடுக்க வந்தபோது ரிஷிபத்தினிகள் அவர் அழகில் மயங்கிப் பின்னாலேயே போய்விடுகிறார்கள். கோபம் கொண்ட ரிஷிகள் அபிசார ஓமம் செய்து சிவனை அழிக்க முயன்றார்களே அல்லாமல் தங்கள் மனைவியர்களைத் தண்டிக்கவில்லை. கற்புக் கோட்பாடு இறுக்கம் பெறாத காலத்துத் தொன்மம் இது. வலிமையால் பெண்ணைத் தேர்ந்தெடுத்த காலம்.

2. அகலிகைக் கதையில், வந்திருப்பவன் இந்திரன் என்று தெரிந்தே அவனோடு கூடிய அகலிகையையும் இந்திரனையும் கொளமன் சபித்தான். கற்பு பெண்களுக்கு வலியுறுத்தப்பட்ட காலத்துத் தொன்மம் இது.

3. ரேணுகாதேவி- ஜமதக்கினி ரிஷி கதையில் உடலால் தவறிழைக்கவில்லை யென்றாலும் மனதால் தவறிழைத்தாள் என்று கூறி மகனைக் கொண்டு தலையைத் துண்டித்தார்கள். கற்புக் கோட்பாடு இறுக்கம் பெற்ற காலத்துத் தொன்மம் இது.

4. கார்த்திகைப் பெண்டிர் - சப்த ரிஷி மாதர்கள் பற்றிய தொன்மங்கள் வடவர் தொன்மங்களிலேயும் தமிழ்த் தொன்மங்களிலேயும் கற்பு பற்றிய மதிப்பீடுகளின் பல்வேறு நிலைகளைச் சுட்டுகின்றன. இந்திரன், சிவனின் கருவை ஏழு துண்டங்களாகச் சிதைத்து கார்த்திகைப் பெண்டிர்களின் கணவன்மார்களாகிய ரிஷிகளிடம் தர, அவர்கள் அத்துண்டங்களைத் தீயிலிட்டுத் தூய்மை செய்து தம் மனைவியர்களுக்குத் தருகின்றார்கள். அருந்ததி தவிர்த்த ஆறு ரிஷி பத்தினிகளும் சிவனின் அக்கருவை உண்டு ஆறு குழந்தைகளைப் பெற்றெடுக்கின்றார்கள். பரிபாடல் ஐந்தாம் பாடலில் இச்செய்தி இடம்பெற்றுள்ளது. தத்தம் கணவன்மார்களே சிவனின் கருவைத் தீயிலிட்டு தூய்மைப் படுத்தித் தருவதால் ரிஷி பத்தினிகளாகிய கார்த்திகைப் பெண்டிர்களின் கற்புக்கு ஏதும் பங்கம் வரவில்லை என்று இத்தொன்மம் அமைதி காண்கிறது.

இப்படித் தொன்மங்களின் வழியாக இறுக்கம் பெற்ற பெண்- கற்பு பற்றிய கருத்தாக்கங்களுக்கு எதிரான பெண்ணுரிமை, ஆண் பெண் சமத்துவம் குறித்த புதிய கருத்தாக்கங்களைச் சமுதாயத்தில் பதிக்க இந்தத் தொன்மங்களையே கையாளுவதென்பது படைப்புத் தளத்தில் ஒரு வெற்றிகரமான உத்தி. தொன்மங்களின் நெகிழ்வுத் தன்மை இதற்குப் பெரிதும் துணைநிற்கின்றது. நெகிழ்வுத் தன்மை என்பது இங்கே மாற்றங்களை ஏற்றுக்கொள்வது என்று பொருள்படும். மாற்றங்களும் மாற்றங்களால் விளைந்த மாற்று வடிவங்களுமே தொன்மங்களை நிலைப்படுத்துகின்றன. புதிய சூழலில் அல்லது கால மாற்றத்தில் ஒரு தொன்மம் நெகிழ்வடையும் போழுது மாற்றங்கள் அத்தொன்மத்தை அழிவிலிருந்து காக்கின்றன அல்லது வாழ்விக்கின்றன என்று கருதுதல் வேண்டும்.அகலிகைக் கதையின் மாற்றுவடிவங்கள் அத்தொன்மத்தின் நெகிழ்வுத் தன்மைக்குத் தக்க சான்றுகளாகும். வான்மீகி சொன்ன அகலிகைக் கதை, வியாச பாரதத்தில் பின்வருமாறு இடம்பெறுகிறது, கௌதமன் அகலிகையின் தலையைத் துண்டிக்க உத்திரவிடுகிறான் பின்னர் மனம் மாறி அகலிகையை ஏற்றுக் கொள்கிறான். பரிபாடலில் அகலிகையைக் கல்லாகுமாறு சபித்தான் என்று வேறு ஒரு வடிவம் இடம்பெறுகிறது. ஏறக்குறைய சம காலங்களிலேயே இத்துணை நெகிழ்ச்சியுற்றிருந்த அகலிகைத் தொன்மம், இருபதாம் நூற்றாண்டில் பத்துக்கும் மேற்பட்ட மாற்று வடிவங்களை ஏற்பது அதன் உயிர் வாழும் ஆற்றலையே காட்டுகிறது. புதுமைப் பித்தனும் தொன்மங்களின் மரபை நன்றாக ஓர்ந்தே தம்முடைய அகலிகை, சாப விமோசனம் ஆகிய கதைகளை உருவாக்கியுள்ளார்.

துணை நின்ற நூல்கள்:
1. தி. முருகரத்தினம், புதுமைப்பித்தன் சிறுகதைக்கலை, 1976
2. க.கைலாசபதி, அடியும் முடியும், 1996
3. சரசுவதி வேணுகோபால், தொன்மக் கதைகள் கோட்பாட்டு ஆய்வுகள், 1997
4. ராஜ் கௌதமன், புதுமைப்பித்தன் எனும் பிரம்மராட்சஸ், 2000
5. இரா. வேங்கடாசலபதி (பதி.ஆ.), புதுமைப்பித்தன் கதைகள், 2001
6. பேரா. க. பஞ்சாங்கம், தொன்மத் திறனாய்வு, 2005